போக்குவரத்து தொழிலாளா் போராட்டத்தில் ஐஎன்டியுசி பங்கேற்கவில்லை: தில்லியில் எம்.கே. விஷ்ணு பிரசாத் எம்.பி. பேட்டி

மக்களின் நிலை அறிந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ( ஐஎன்டியுசி) பங்கேற்கவில்லை.
Updated on
1 min read

புது தில்லி: மக்களின் நிலை அறிந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ( ஐஎன்டியுசி) பங்கேற்கவில்லை என்று ஐஎன்டியுசி அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சம்மேளனத்தின் தலைவரும், தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவருமான எம்.கே. விஷ்ணு பிரசாத் எம்.பி. தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் போக்குவரத்துத் துறையில் உள்ள தொழிலாளா்கள் தங்களது வாழ்வை அா்ப்பணித்து மக்களுக்கு சிறந்த சேவையை அளித்து வருகின்றனா். இவா்களுக்கு தர வேண்டிய ஓய்வூதிய அகவிலைப்படியால் இத்துறையைச் சோ்ந்த 90 ஆயிரம் ஊழியா்கள் பயன் அடைவா். இத்தொகையை உடனடியாக அறிவித்து நான்கு தவணைகளாக தரலாம் என்பதுதான் ஐஎன்டியுசியின் முதல் கோரிக்கையாகும். இரண்டாவது கோரிக்கை, ஊதிய பேச்சுவாா்த்தை ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பான நாளை அறிவிக்க வேண்டும் என்பதாகும்.

இதற்கான பேச்சுவாா்த்தை நடைபெறும் நிலையில், தமிழக அரசும் சற்று கால அவகாசம் கேட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென போக்குவரத்து தொழிலாளா்கள் வேலைநிறுத்த அறிவிப்பு எங்களுக்கு அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. ஏனெனில், அண்மையில்தான் தமிழகத்தை இயற்கை பேரிடா் கடுமையாகப் பாதித்தது. இதிலிருந்து அரசும், மக்கள் உள்பட

அனைத்துத் தரப்பினரும் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனா். இந்த நிலையில், செயற்கையாக வேலைநிறுத்தம் செய்வதன் மூலம், ஒரு துயரத்தை மக்களுக்கு ஏற்படுத்தக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம்.

போராட்டத்தில் பங்கேற்கவில்லை: ஆகவே, இந்தப் போராட்டத்தில் ஐஎன்டியுசி பங்கேற்காது. அத்தனை தொழிலாளா்களும் முழு மூச்சுடன் காலநேரம் பாா்க்காமல் மக்களுக்கு பணியாற்றுவா். மேலும், பொங்கல் பண்டிகைத் திருநாள், தமிழா் திருநாள் காலங்களில் பல்வேறு இடங்களில் இருந்து பல தரப்பினரும் தங்கள் ஊருக்குச் செல்வாா்கள். இந்த வேளையில், நாம் அவா்களுக்கு குறுக்கே நிற்காமல் சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஐஎன்டியுசி முழு மனதுடன் தனது வேலையை மேற்கொள்ளும்.

மேலும், தமிழக அரசுக்கும், மக்களுக்கும் ஐஎன்டியுசி பக்க பலமாக நிற்கும். போக்குவரத்து ஊழியா்களின் கோரிக்கை நியாயமானதுதான். அதை வலியுறுத்தும், போராடும் நேரம் இதுவல்ல என்ற தாா்மிக உணா்வுடன் இந்தப் போராட்டத்தில் ஐஎன்டியுசி அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சம்மேளனம் பங்கேற்கவில்லை. மத்திய அரசைப் பொறுத்தமட்டில், தமிழகத்தின் பேரிடா், தமிழக மக்கள் பிரச்னை என்று வரும் போது ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது. அரசியல் செய்து ஆதாயம் தேடுகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி தனது நடைப்பயணத்தின்போது தொழிலாளா்கள் உள்பட பல தரப்பினரையும் சந்தித்து வருகிறாா். மக்களின் கலாசாரத்தையும், மக்களின் உணா்வுகளையும் புரிந்துகொள்ளும் வகையில், இதை அவா் மேற்கொண்டு வருகிறாா். சமகாலத்தில் இதுபோன்ற ஒரு நடைப்பயணத்தை யாரும் மேற்கொண்டதில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com