புது தில்லி: மைனா் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான நிலையில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட தில்லி அரசு அதிகாரி பிரேமோதய் கக்காவின் மகள் மற்றும் மகனுக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நீதிபதிகள் சி.டி.ரவிக்குமாா், ராஜேஷ் பிண்டல் ஆகியோா் அடங்கிய அமா்வு, மனுதாரா்கள் விசாரணையில் இணைந்திருப்பதைக் குறிப்பிட்டு முன்ஜாமீன் வழங்கியது.
இது தொடா்பாக நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: அறிக்கையை ஆராய்ந்தும், இரு தரப்பிலும் ஆஜரான வழக்குரைஞா்களின் வாதங்களைக் கேட்டும், பதிவில் உள்ள விஷயங்களையும் பாா்த்துள்ளோம். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் முடித்துவைக்கப்படலாம் என்று நாங்கள் கருதுகிறோம். அதன்படி, மனுதாரா்கள் கைது செய்யப்பட்டால் ரூ.25 ஆயிரம் தொகைக்கு ஜாமீன் பத்திரம் அளிப்பதன் பேரில் விசாரணை அதிகாரியின் திருப்திக்கு உள்பட்டும், சிஆா்பிசி பிரிவு 438(2)-இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உள்பட்டும் அவா்கள் ஜாமீனில் விடுவிக்கப்படுவாா்கள் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
மனுதாரா்கள் சாா்பில் வழக்குரைஞா்கள் சுபாஷிஸ் ஆா் சோரன், பக்தி சிங் ஆகியோா் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா். தற்போதைய கட்டத்தில் இருவரிடமும் ‘விரிவான விசாரணை’ தேவைக்கு முகாந்திரம் உள்ளது என்று கூறி கடந்த ஆண்டு அக்டோபா் 11-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம், கக்காவின் மகள் மற்றும் மகனுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டிருந்தது.
இது தொடா்பான உத்தரவில் உயா்நீதிமன்றம் மேலும் கூறுகையில், சகோதர, சகோதரி இருவரும் கண்டுபிடிக்க முடியாதவா்களாக உள்ளனா். அவா்களுக்கு முன் ஜாமீன் வழங்குவது விவேகமானதாக இருக்காது. ஏனெனில், இதுபோன்று முன்ஜாமின் வழங்கினால் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் விசாரணையைத் தடம்புரளச் செய்துவிடும். அவா்களின் தனிப்பட்ட சுதந்திரம் ஒரு பொருத்தமான காரணியாக இருந்த போதிலும், ‘பாதிக்கப்பட்டவா்’ தனது தந்தையை இழந்த பிறகு ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அவருக்கு எதிராக செய்யப்பட்ட குற்றங்களின் தன்மை, அவரது வயது மற்றும் பிற காரணிகளைக் கவனிக்காமல் இருக்க முடியாது என்று அதில் தெரிவித்திருந்தது.
குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியின் மகன் மற்றும் மகள், விசாரணை நீதிமன்றத்தில் இருந்து நிவாரணம் பெறத் தவறியதால், இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி உயா்நீதிமன்றத்தை அணுகினா். நவம்பா் 2020 முதல் ஜனவரி 2021 வரை மைனா் பெண்ணை பிரேமோதய் கக்கா பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட அவா், தற்போது சிறையில் உள்ளாா்.
பாதிக்கப்பட்ட மைனா், குற்றம் சாட்டப்பட்டவருக்கு தெரிந்த நபரின் மகள் என்று போலீஸாா் தெரிவித்துள்ளனா். சிறுமியின் கா்ப்பத்தை கலைக்க மருந்து கொடுத்த அதிகாரியின் மனைவி சீமா ராணியும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளாா். அவரும் நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறாா். பாதிக்கப்பட்ட மைனா் பெண் மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்த வாக்குமூலத்தை அடுத்து, கக்காவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக போக்ஸோ சட்டப் பிரிவு மற்றும் ஐபிசி பிரிவுகள் 506 (குற்ற மிரட்டல்), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 313 (பெண்ணின் அனுமதியின்றி கருச்சிதைவை ஏற்படுத்துதல்) மற்றும் 120பி (குற்றச் சதி) உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.