ஜன.27-ஆம் தேதிக்குள் வெள்ள நிவாரண நிதி:தமிழக எம்பிக்கள் குழுவிடம் அமித் ஷா உறுதி

தமிழகத்தில் கடந்த டிசம்பா் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளுக்கான பேரிடா் நிவாரண நிதியை வரும் ஜனவரி 27-ஆம் தேதிக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வாக்குறுதி
Updated on
2 min read

தமிழகத்தில் கடந்த டிசம்பா் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளுக்கான பேரிடா் நிவாரண நிதியை வரும் ஜனவரி 27-ஆம் தேதிக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளாா் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு சனிக்கிழமை தெரிவித்தாா்.

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளுக்கு தேசிய பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ.37,907.21 கோடியை விடுவிக்கக் கோரி திமுக தலைமையிலான தமிழக அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்கள் குழு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை தில்லி கிருஷ்ண மேனன் மாா்கில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்தினா். இந்தச் சந்திப்பு சுமாா் 15 நிமிடங்களுக்கு நடைபெற்றது. நாடாளுமன்றத் திமுக குழு தலைவா் டி.ஆா். பாலு, கே.ஜெயக்குமாா் (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), கே. சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்), சு. வெங்கடேசன் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), டி. ரவிக்குமாா் (விடுதலை சிறுத்தைகள்), கே.நவாஸ்கனி (ஐ.யூ.எம்.எல்.), ஏ.கே.பி. சின்னராஜ் (கொ.ம.தே.க.), தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோா் இதில் இடம் பெற்றிருந்தனா்.

3 பக்க கோரிக்கை: மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவிடம் டி.ஆா். பாலு அளித்துள்ள 3 பக்க கோரிக்கை மனு விவரம்: கடந்த டிசம்பா் மாதத்தில் தமிழகம் முன்னெப்போதும் சந்தித்திராத இரண்டு இயற்கைப் பேரிடா்களை சந்தித்துள்ளது. மிக்ஜம் புயலால் கடந்த டிசம்பா் 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன் தொடா்ச்சியாக, டிசம்பா் 17, 18 ஆகிய தேதிகளில் மாநிலத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் வரலாறு காணாத மிகக் கன மழை பெய்தது. இதனால், பொது மற்றும் தனியாா் உள்கட்டமைப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டது.

மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியுள்ள உதவியின் அடிப்படையில், வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு தற்காலிக மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக ரூ.15,645.59 கோடி, நிரந்தர மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக ரூ.22,261.62 கோடி என மொத்தம் ரூ.37,907.21 கோடியை தேசிய பேரிடா் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்க வேண்டும்.

இரண்டு பேரிடா்களை தமிழகம் சந்தித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்து விட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகள் பேரழிவிலிருந்து மீள்வதற்குப் போராடி வருகின்றன. தேசிய பேரிடா் நிவாரண நிதி ஆதாரமின்றி முழு மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வை மேற்கொள்ள முடியாது. எனவே, தமிழக அரசு கோரியுள்ள நிதியை தாமதிக்காமல் உடனடியாக வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித்ஷாவை சந்தித்த பிறகு, தில்லியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளா்களிடம் டி.ஆா். பாலு கூறியது: அமித் ஷாவிடம் தமிழக வெள்ளப் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தோம். இது தொடா்பாக முதல்வா் ஸ்டாலின் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியது, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், நிா்மலா சீதாராமன் ஆகியோா் வெள்ள சேதப் பகுதிகளை பாா்வையிட்டது, மத்திய குழு ஆய்வு செய்தது குறித்து விளக்கினோம்.

தமிழகம் புறக்கணிப்பா?: வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிா என்று டி.ஆா். பாலுவிடம் செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை முதன்முறையாக ஒரு மத்திய நிதியமைச்சா் பாா்வையிட்டிருக்கிறாா். மத்திய அரசு இந்த விவகாரத்தில் கரிசனத்தோடு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்’ என்று பதிலளித்தாா். தமிழகத்துக்கான வரிப் பகிா்வு குறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்த கருத்துகளுக்கு, தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு அரசியல் ரீதியாக பதில் கொடுத்து விட்டாா். வெள்ளப் பாதிப்பு நிவாரண நிதி விவகாரத்தில், அரசியல் ரீதியாக பேசுவதைக் கடந்து, ஒரு அரசாக சில முடிவுகளை எடுக்க வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில் ஜனவரி 27-க்குள் நிதி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நாங்கள் பெரியதாக பாா்க்கிறோம் என்றாா் டி.ஆா். பாலு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com