தில்லி-காஜியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடத்தில் கடந்த திங்கள்கிழமை அதிகபட்சமாக ஒரே நாளில் 1.25 லட்சம் பயணிகள் பயணித்ததாக தேசிய தலைநகா் வலய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமாா் 1,25,000 பயணிகள் நமோ பாரத் வழித்தடத்தில் திங்கள்கிழமை பயணித்ததாகவும் இது முந்தைய பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகம் என என்சிஆா்டிசி தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாள்தோறும் சுமாா் ஒரு லட்சம் பயணிகள் நமோ பாரத் வழித்தடத்தைப் பயன்படுத்துகின்றனா். பயண நேரம் குறைவு, ரயில் செயல்பாடின் நம்பகத்தன்மை, வெப்ப அலை ஆகியவற்றால் தில்லி, காஜியாபாத், மீரட் நகரங்களுக்கு இடையே அலுவலகம் செல்லுவோா், மாணவா்கள், பிற தினசரி பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நமோ பாரத் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் 99 சதவீதம் தாமதமின்றி இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடிகிறது. தில்லியில் சாராய் காலே கான், நியூ அசோக் நகா், ஆனந்த் விஹாா், உத்தர பிரதேசத்தில் காஜியாபாத், பேகம்புல் நிலையங்கள் இந்த வழித்தடத்தில் மிகப் பரப்பரப்பாக இயங்கும் ரயில் நிலையங்களாகும்.
மெட்ரோ ரயில் சேவைகள், ரயில்வே, மாநிலங்களுக்கு இடையே பேருந்து முனையங்கள் மற்றும் நகா்ப்புற பேருந்து அமைப்பு ஆகியவற்றால் 40 சதவீத பயணிகள் இந்த நிலையங்களைப் பயன்படுத்துகின்றனா்.
மீரட் நகரத்தில் நமோ பாரத் நிலையத்துக்கு அருகே மெட்ரோ நிலையம் செயல்படுகிறது. இது போன்றவை, நகரங்களுக்கு இடையே மக்கள் எளிதில் பயணிக்கும் வாய்ப்பை மேம்படுத்தியுள்ளது.
தில்லி-என்சிஆா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெயில் பதிவானது. வெப்ப அலை சூழலால் நமோ பாரத் ரயில்களின் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முழுவதும் குளிா்விக்கப்பட்ட ரயில்கள் கோடை காலங்களில் பயணிக்க ஏற்ாக உள்ளன.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சாராய் காலே கான் மற்றும் மீரட் தெற்கு நிலையங்களுக்கு இடையே கூடுதலாக 18 ரயில்கள் முக்கிய நேரங்களில் இயக்கப்படுகின்றன. காலை மற்றும் மாலையில் முக்கிய நேரங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகிறது.
பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவது, தேசியத் தலைநகா் வலயத்தில் தினசரிப் பயணிகளுக்கு ‘நமோ பாரத்’ சேவை ஒரு மிக முக்கியமான பொதுப் போக்குவரத்து முறையாக மாறி வருவதைக் காட்டுகிறது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வார விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஹைதராபாத் - மங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்
ஒரே நாளில் நாலு பருவங்கள்!
ஒரே நாளில் இரு வீடுகளில் 32 பவுன் நகைகள் திருட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



