பயனற்ற நிலையில் பல கோடி ரூபாய் அரசு சொத்துக்கள்
ஆலங்குளம், ஏப். 13: ஆலங்குளத்தில், பராமரிப்பின்றி பயனற்ற நிலையில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் மற்றும் கட்டடங்களைப் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் வலியுறுத்


ஆலங்குளம், ஏப். 13: ஆலங்குளத்தில், பராமரிப்பின்றி பயனற்ற நிலையில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் மற்றும் கட்டடங்களைப் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில், வளர்ந்து வரும் நகரங்களில் முக்கியமானது ஆலங்குளம். இப் பகுதி நிலங்களின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பழைய பஸ் நிலையப் பகுதியில் ஒரு சென்ட் நிலம் ரூ. 5 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரையும், புதிய பஸ் நிலையப் பகுதியில் ஒரு சென்ட் ரூ. 50 லட்சத்திலிருந்து 1 கோடி வரையும் விலை மதிப்புடையது.
இதனால், பிரதான சாலையில் காலி இடம் கிடைப்பதே அரிதானது. ஆனால், பிரதான சாலைஓரங்கள் மற்றும் ஊர்ப்பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான காலி நிலங்களும், கட்டடங்களும் பராமரிப்பின்றி பயன்பாடில்லாமல் உள்ளன.
குறிப்பாக, ஆலங்குளம் ஒன்றிய அலுவலக வளாகப் பகுதி, ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்புப் பகுதி, புதிய பஸ் நிலைய மேல்பகுதி, கால்நடை மருந்தக பிற்பகுதி, காவல் நிலையம், அரசு மாணவர் விடுதி, துத்திக்குளம் சாலை அருகே உள்ள பகுதிகள், தப்பளக்குண்டு மைதானம் உள்ளிட்ட பகுதிகளில், பல ஏக்கரில் காலி நிலங்களும், கட்டடங்களும் பயனற்ற நிலையில் உள்ளன.
பயனின்றி கிடக்கும் இந்த அரசு கட்டடங்களும், காலியிடங்களும் பல கோடி மதிப்பிலானது. புதிய பஸ் நிலையம் அருகே அரசு மருத்துவமனைக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன.
இதில், மருத்துவமனைப் பணியாளர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு, ஒரு சில வீடுகளைத் தவிர பல வீடுகள் பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கின்றன. இதன் அருகே உள்ள பேரூராட்சிக் கடைகளுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வாடகை செலுத்தப்பட்டு வந்தாலும், அருகே உள்ள இடங்கள் வீணாகக் கிடக்கின்றன.
காலியாகவும், பராமரிப்பின்றியும் காணப்படும் இந்தப் பகுதிகளில், அரசு சார்பில் பெரிய அளவில் வணிக வளாகம், திருமண மண்டபம் அமைக்கலாம்.
அதன் மேற்பகுதியில் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்பட அரசு சார்ந்த நிறுவனங்களின் கிளைகள் அமைப்பதற்கு இடம் கொடுக்கலாம். இதன் மூலம், பொதுமக்களுக்கும் எளிதில் சேவை கிடைக்கும். அரசுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும்.
கால்நடை மருந்தகம் அமைந்துள்ள பகுதியை முழுவதுமாக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொடுத்து, அரசு மருத்துவமனையை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தலாம். கால்நடை மருந்தகத்திற்கு பிரதான சாலையில் காலியாக உள்ள இடத்திலேயே கட்டடம் கட்டித் தரலாம்.
எஞ்சிய இடங்களில் வாடகைக் கட்டடங்களில் இயங்கக்கூடிய கிளை நூலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், பீடித் தொழிலாளர் நலநிதி மருந்தகம், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம் உள்பட வாடகைக் கட்டடத்தில் இயங்கக்கூடிய அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சொந்தக் கட்டடங்களைக் கட்டிக் கொடுக்கலாம். இதன் மூலம் அரசுப் பணம் வாடகையாக வீணடிக்கப்படுவதைத் தவிர்க்கலாம். மேலும், புதிதாக கருவூலம், தீயணைப்பு நிலையம் போன்றவைகள் அமைக்க காலி இடங்களைப் பயன்படுத்தலாம்.
எனவே, பயனின்றிக் கிடக்கும் அரசு நிலம் மற்றும் கட்டடங்களைப் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆலங்குளம் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...