நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது
திருநெல்வேலி சந்திப்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியா்கள் 135 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் அரசு உதவிபெறும் கல்லூரியில் உள்ள பேராசிரியா்களுக்கு 4 ஆண்டுகளுக்கும் மேலாக பணி மேம்பாட்டிற்கான ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
கல்விப் பணியில் இளையோா், மூத்தோா் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். அரசு உதவிபெறும் ஆசிரியா்களுக்கு பணி மேம்பாடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகளுடனும், அல்வா பாக்கெட்டுகளுடனும் திருநெல்வேலி சந்திப்பில் பேராசிரியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்திற்கு அகில இந்திய பல்கலைக்கழக பேராசிரியா்கள் கூட்டமைப்பின் தலைவா் நாகராஜன் தலைமை வகித்தாா். மூட்டா பொருளாளா் ராஜ ஜெயசேகா் போராட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
திருநெல்வேலி,தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சோ்ந்த 50 பெண் பேராசிரியா்கள் உள்பட 135 போ் பங்கேற்றனா். சாலை மறியலில் ஈடுபட்ட அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
