கன்னியாகுமரி மாவட்டம், அதங்கோடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் தினந்தோறும் வழங்கப்படும் 62 லட்சம் லிட்டர் குடிநீர், கடந்த 2 மாதங்களாக உப்பு நீராக விநியோகம் செய்யப்பட்டு வருவதால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் களியக்காவிளை பேரூராட்சி உள்பட 3 பேரூராட்சி, 12 ஊராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
களியக்காவிளை பேரூராட்சி, மெதுகும்மல் ஊராட்சி மற்றும் 22 வழியோர குடியிருப்புகளுக்கான களியக்காவிளை-மெதுகும்மல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், கொல்லங்கோடு, ஏழுதேசம் பேரூராட்சி மற்றும் 27 வழியோர கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 79 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்காக அதங்கோடு பகுதியில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.18 கோடி திட்ட மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு நிலையத்துக்கு அதங்கோடு செங்கிலாகம் பகுதியில் தாமிரவருணி ஆற்றங்கரையோரம் கிணறு அமைக்கப்பட்டு, ராட்சத குழாய் அமைத்து இயந்திரம் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதங்கோடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இப்பகுதிகளுக்கு நாள்தோறும் மொத்தம் 62 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
உப்புநீராகும் தண்ணீர்: குமரி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கோதையாறு, கிழவியாறு, குற்றியாறு, சாத்தாறு ஆகியவை இணைந்து தாமிரவருணி ஆறாக இம்மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளை வளம்கொழிக்கச் செய்கிறது. இரயுமன்துறை பொழிமுகம் பகுதியில் கடலில் கலக்கிறது.
தற்போது, தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் குறைவாக உள்ளதாலும், ஆற்றுநீர் கடலில் சேரும் பகுதியின் முகத்துவாரம் மணல் நிரம்பி அடைபட்டதாலும் கடல்நீர் ஆற்றுநீரில் கலந்துவிடுகிறது. இதனால் இரயுமன்துறை முதல் குழித்துறை வரை சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு ஆற்றுநீரில் உப்புதன்மை அதிகரித்து குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தாமிரவருணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் அனைத்தும் இந்த 10 கி.மீட்டர் பகுதிக்குள் வருவதால், குடிநீர்த் திட்டங்கள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் உப்புச் சுவை அதிகரித்துள்ளது. இதனால் இந்த நீரைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகிறது. விவசாயத்துக்கு இந்த நீரைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலையும் உள்ளது. மேலும், ஆற்றங்கரையோர பகுதி வீட்டுக் கிணறுகளில் உள்ள நீரும் உப்பு நீராக மாறியுள்ளது.
தீர்வு என்ன? தற்போது தாமிரவருணி ஆற்று நீரில் கடல் நீர் புகுந்துள்ளதால், பெருமழை பெய்தால் மட்டும் இந்த உப்பு நீரை அகற்ற முடியும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில், தாமிரவருணி ஆற்றின் குறுக்கே கணபதியான்கடவு, பருத்திக்கடவு, மங்காடு பகுதிகளில் தடுப்பணை கட்டினால் மட்டுமே ஆற்றுநீரில் கடல்நீர் புகுவது தடுக்கப்பட்டு, எதிர்காலத்தில் ஆற்றங்கரையோர குடிநீர்த் திட்ட கிணறுகளைப் பாதுகாக்க முடியும்.
இதுகுறித்து சமூக ஆர்வலரும் களியக்காவிளை பேரூராட்சி முன்னாள் உறுப்பிருமான என். விஜயேந்திரன் கூறியது: தடுப்பணைகள் அமைத்தால் கடல்நீர் உள்புகுவது தடுக்கப்படுவதுடன், நிலத்தடி நீரும், விவசாய நிலங்களும் பாதுகாக்கப்படும். மேலும், அதங்கோடு சுத்திகரிப்பு நிலையம் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் உப்புநீர் விநியோகத்தை நிறுத்திவிட்டு, மழை பெய்யும் வரை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் லாரியில் குடிநீர் விநியோகம் செய்யவும், ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.