கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளங்கள், கண்மாய்களில் விவசாயிகள் மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குமரி மாவட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் பொறுப்பிலுள்ள குளங்களிலிருந்து வண்டல் மண் மற்றும் களிமண் (மண்பாண்டங்கள் செய்வதற்கு) எடுப்பதற்கு அரசு ஆணையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொறுப்பில் உள்ள கண்மாய், குளங்களில் வண்டல் மண், களி மண் எடுப்பதற்கு தகுதிவாய்ந்த கண்மாய், குளங்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி விவசாயிகள் ஒரு ஏக்கர் நன்செய் நிலத்துக்கு 75 கனமீட்டர் அளவிற்கும், ஒரு ஏக்கர் புன்செய் நிலத்திற்கு 90 கனமீட்டர் அளவிற்கும், உண்மையான வீட்டுத்தேவைகளுக்கு 30 கனமீட்டர் அளவிற்கும், மண்பாண்டங்கள் செய்வதற்கு 60 கனமீட்டர் அளவிற்கு களிமண்ணும் எடுத்துச் செல்வதற்கு விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, மண் எடுக்க அனுமதி பெற்றுள்ள விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் தவிர, இதர விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் தங்கள் எல்லைக்குள்பட்ட வட்டாட்சியர்களிடம் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பங்களை வட்டாட்சியர்கள் பரிசீலனை செய்து முறையான ஆணை பிறப்பிக்கப்பட்டு, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை மூலமாக உரிய நடைச்சீட்டுகள் வழங்கப்படும். மேலும் ஒரு கனமீட்டர் கனிமத்துக்கு மண் தோண்டுதல் மற்றும் ஏற்றுக் கட்டணமாக ரூ.35.20 ஐ கட்டணமாக, கேட்பு வரைவோலையாக செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு, ஊரக வளர்ச்சித்துறை பெயருக்கு செலுத்தவேண்டும். மண் எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்ட கால அளவு 20 நாள்கள் ஆகும். வழங்கப்பட்ட வண்டல், களிமண்ணை விவசாயம், வீட்டுத்தேவை, மண்பாண்டம் செய்தல் அல்லாத பிற தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









