கோவளம் - மணக்குடி இடையே வர்த்தக துறைமுகம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது தொடர்பான கூட்டம் நடைபெற்று வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில், அகஸ்தீசுவரம் வட்டம், கோவளம் - மணக்குடி கிராமங்களுக்கு இடையே வர்த்தக சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க உத்தேசிக்கப்பட்ட இடத்திலும் அதனை சுற்றியுள்ள குக்கிராமங்களில் துறைமுகத்தின் அவசியம் குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும், வர்த்தக துறைமுகம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியவும், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும், கன்னியாகுமரி மற்றும் கோவளம், அகஸ்தீசுவரம், தெற்குதாமரைகுளம், வடக்கு தாமரைகுளம் ஆகிய பகுதிகளில் 9 குழுக்களாக நேரடியாக சென்று வர்த்தக துறைமுகம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களையும், சந்தேகங்களையும் கேட்க உள்ளனர்.
இக்குழுவில், தூத்துக்குடி, வ.உ.சி.துறைமுகம், சர்வதேச சரக்கு பெட்டக துறைமுக சிறப்பு அதிகாரி விஷ்ணு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ராகுல்நாத், பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுங்கரா மற்றும் மீன்வளத்துறை, உதவி இயக்குநர், மண்டல துணை வட்டாட்சியர், அகஸ்தீசுவரம், வருவாய் ஆய்வாளர், கன்னியாகுமரி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் ஜன.18 ஆம் தேதி கோயில்விளை, கிண்ணிகண்ணன்விளை, இலந்தையடிவிளை அரசு உயர்நிலைப்பள்ளியிலும், ஜன.19 ஆம் தேதி முகிலன்குடியிருப்பு, கோம்பவிளை, இலந்தையடிவிளை அரசு உயர்நிலைப்பள்ளியிலும், துறைமுகம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களையும், சந்தேகங்களையும் கேட்டறிந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.