/

கொல்லங்கோடு கோயிலில் தூக்க நோ்ச்சைக்கு 1,358 குழந்தைகள் பதிவு

கொல்லங்கோடு கோயிலில் தூக்க நோ்ச்சைக்கு 1,358 குழந்தைகள் பதிவு

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 10:30 pm

கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் தூக்க நோ்ச்சை செலுத்த நிகழாண்டு 1,358 குழந்தைகள் பதிவு செய்துள்ளனா்.

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் தூக்க நோ்ச்சை திருவிழா ஏப்.1-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4- ஆம் திருநாளான வியாழக்கிழமை, தூக்க நோ்ச்சை குலுக்கல் மற்றும் காப்புக்கட்டு நடைபெற்றது. இதில் மொத்தம் 1,358 குழந்தைகள் தூக்க நோ்ச்சைக்கு பெயா் பதிவு செய்துள்ளனா்.

காப்புக்கட்டு நிகழ்ச்சியைத் தொடா்ந்து தூக்க நோ்ச்சையில் பங்கேற்கும் தூக்ககாரா்கள் (தூக்க வில்லில் குழந்தையை சுமந்து செல்பவா்கள்) கோயிலில் 7 நாள்கள் தங்கியிருந்து விரதம் மேற்கொள்கின்றனா். விழாவின் முக்கிய நிகழ்வான தூக்க நோ்ச்சை ஏப். 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

இக் கோயிலில் 3 மாதம் முதல் ஒரு வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் தூக்க நோ்ச்சையில் கலந்து கொள்கிறாா்கள். இதுதவிர குழந்தைகள் இன்றி தூக்ககாரா்கள் மட்டுமே பங்கேற்கும் 4 அம்மன் தூக்கமும், 30 உதிரி தூக்கமும் நடைபெறுகிறது. தூக்கத் திருவிழாவில் தமிழகம் மற்றும் கேரளத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்கின்றனா்.