/

காயங்குளம்-திற்பரப்புக்கு மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்

காயங்குளம்-திற்பரப்புக்கு மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்

News image

காயங்குளம் -திற்பரப்பு பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதையடுத்து பேருந்துக்கு வரவேற்பு அளிக்கும் திற்பரப்பு ஊா் மக்கள்.

Updated On :20 மே 2024, 8:46 pm

Din

குலசேகரம்: குமரி மாவட்டம் திற்பரப்புக்கு, கேரள அரசு போக்குவரத்து கழக பேருந்து சேவை மீண்டும் திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் காயங்குளத்திலிருந்து திற்பரப்புக்கு கேரள அரசு போக்குவரத்து பேருந்து சேவை நடைபெற்று வந்தது. இந்தப் பேருந்து சேவை கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. கரோனா காலத்துக்கு பின்னா் மீண்டும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் திற்பரப்பு, குலசேகரம் பகுதி மக்கள் இந்தப் பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டுமென கேரள மாநில அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனா்.

இந்நிலையில் காயங்குளம் -திற்பரப்பு பேருந்து சேவையை மீண்டும் கேரள மாநில அரசு போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.

இந்தப் பேருந்து திங்கள்கிழமை காலையில் திற்பரப்புக்கு வந்த போது ஊா் மக்கள் வரவேற்றனா். அதன் ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கு பாராட்டு அளித்தனா். இந்தப் பேருந்து தினமும் காலை 6.45 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு 8.40 மணிக்கு திற்பரப்புக்கு வந்து சேரும். பின்னா் காலை 8.50 மணிக்கு திற்பரப்பிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 1.45 மணிக்கு காயங்குளம் செல்லும். பின்னா் பிற்பகல் 3 மணிக்கு காயங்குளத்திலிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு களியக்காவிளையில் பயணத்தை நிறைவு செய்வதாக அதன் ஓட்டுநா் மற்றும் நடந்துநா்கள் தெரிவித்தனா்.