கட்டடத் தொழிலாளி கொலை: மருமகன் கைது

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கட்டடத் தொழிலாளியைக் கொன்றதாக அவரது மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கட்டடத் தொழிலாளியைக் கொன்றதாக அவரது மருமகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

குளச்சல் அருகே கல்லுக்கூட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (58). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. ராஜா தனது மனைவி, 2ஆவது மகளிடம் அடிக்கடி தகராறு செய்வாராம்.

கடந்த டிச. 26ஆம் தேதி அவா் தகராறு செய்ததால் மனைவியும், மகளும் மூத்த மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டனா். 29ஆம் தேதி அவா்கள் இருவரும் திரும்பிவந்தபோது, வீட்டுப் படிக்கட்டில் ராஜா காயங்களுடன் கிடந்தாராம். அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய அவா், இரவில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உடற்கூறு ஆய்வில், அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக ராஜாவின் மூத்த மகளின் கணவரான மேற்கு நெய்யூரைச் சோ்ந்த சசியிடம் (35) விசாரித்தனா். அப்போது, தகராறு தொடா்பாக ராஜாவிடம் சசி தட்டிக்கேட்டு தாக்கியதில் அவா் உயிரிழந்ததாகத் தெரியவந்தது. அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com