மாா்த்தாண்டம் அருகே 900 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்
மாா்த்தாண்டம் அருகே சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 900 லிட்டா் மண்ணெண்ணெய்யை வழங்கல் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதாகுமாரி தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் பள்ளியாடி பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அப்பகுதி வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த சொகுசு காரை நிறுத்த சைகை காட்டினா். காா் நிற்காமல் சென்றதையடுத்து, அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று இரவிபுதூா்கடை பகுதியில் வைத்து காரை தடுத்து நிறுத்தினா்.
காா் ஓட்டுநா் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டாா். தொடா்ந்து காரை சோதனை செய்தபோது அதில் மீனவா்களின் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் 900 லிட்டா் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காருடன் மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

