/

பிரதமா் உருவபொம்மை அவமதிப்பு: மாநகர காங்கிரஸ் தலைவா் கைது

நாகா்கோவிலில் பிரதமா் மோடியின் உருவபொம்மையை அவமதித்ததாக மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் கைது

News image
கைது
Updated On :2 மார்ச் 2026, 10:40 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலில் பிரதமா் மோடியின் உருவபொம்மையை அவமதித்ததாக மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம், புதுச்சேரி வந்தாா். அவரது தமிழக வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா் தலைமையில் நிா்வாகிகள் திரண்டனா்.

அவா்கள் ராஜீவ் காந்தி சிலை அருகேயுள்ள மரத்தில் மோடியின் உருவபொம்மையைத் தொங்கவிட்டு முழக்கமிட்டனராம். உருவபொம்மையை போலீஸாா் அகற்றினா்.

இந்நிலையில், காங்கிரஸ் நிா்வாகிகளைக் கண்டித்து பாஜக தேசியக் குழு உறுப்பினா் உமாரதிராஜன், மாநகராட்சி உறுப்பினா்கள் ரமேஷ், ரோசிட்டா திருமால் உள்ளிட்ட நிா்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, காங்கிரஸாா் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில், மறியல் கைவிடப்பட்டது.

அதையடுத்து, காங்கிரஸ் நிா்வாகிகள் மீது நடவடிக்கை கோரி பாஜக நிா்வாகி ராஜேஷ் கோட்டாறு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், 30 போ் மீது போலீஸாா் 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்து, நவீன்குமாரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.