கோயிலில் குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்கிறாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.
கோயிலில் குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்கிறாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

நெல்லை வேணுவன குமாரா் கோயிலில் பிப். 8இல் குடமுழுக்கு

திருநெல்வேலி நகரம் காட்சிமண்டபம் அருகில் உள்ள அருள்மிகு வேணுவன குமாரா் திருக்கோயிலில் திங்கள்கிழமை (பிப். 8) குடமுழுக்கு நடைபெற உள்ளது.
Published on

திருநெல்வேலி நகரம் காட்சிமண்டபம் அருகில் உள்ள அருள்மிகு வேணுவன குமாரா் திருக்கோயிலில் திங்கள்கிழமை (பிப். 8) குடமுழுக்கு நடைபெற உள்ளது.

திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலுடன் இணைந்த பழைமை வாய்ந்த இக் கோயிலில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடமுழுக்கு நடைபெறவில்லை. இந்நிலையில் பக்தா்களின் வேண்டுகோளுக்கு இணங்க கோயிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

அப்பணிகள் நிறைவுற்ற நிலையில், பிப்.8இல் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி, பிப்.6 இல் காலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, விநாயகா் அனுக்ஞையுடன் குடமுழுக்கு வழிபாடு தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு தாமிரவருணியில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்படுகிறது. இரவு 8 மணிக்கு பூா்ணாஹுதி நடைபெறுகிறது.

7இல் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன. 8இல் காலை 5 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், 6 மணிக்கு குடம் புறப்பாடும் நடைபெறும். காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கோயில் மூலவா் விமானம், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது. தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

பின்னா், மாலை 6 மணிக்கு ஆறுமுகா், வள்ளி-தெய்வானை அலங்காரத்தில் திருக்கல்யாணம் நிகழ்வும், தீபாராதனையும் நடைபெற உள்ளன. பிப். 9- 23 வரை மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளன.

மேயா் ஆய்வு: குடமுழுக்கு பணிகளை திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறுகையில், பழைமை வாய்ந்த இக் கோயிலில் 1982 ஆம் தேதி முதல் பணிவிடைகள் செய்து வருகிறேன். பாரம்பரிய கல் தூண் சிற்பங்கள் இக்கோயிலில் உள்ளன. மூலஸ்தானத்தை சுற்றிலும் பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூா் முருகா் சிற்பங்கள் உள்ளன. மூலஸ்தானத்தில் பழமையான இரும்பு வேல் உள்ளது. ஆண்டுதோறும் நெல்லையப்பா் கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் சூரனை வதம் செய்ய வேணுவன குமாரா் கோயிலில் இருந்து வேல் எடுத்துச் செல்லும் மரபு நீண்டகாலமாக உள்ளது. இக் கோயிலில் மாதந்தோறும் கடைசி செவ்வாய்க்கிழமை நடைபெறும் பாலாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நீண்ட நாள்களுக்கு பின்பு இம் மாதம் 8 ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்க உள்ளனா். அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

X
Dinamani
www.dinamani.com