கோவில்பட்டியில் பொதுமுடக்கத்தை மீறி செயல்பட்ட 3 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.
கோவில்பட்டி நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம் அறிவுறுத்தலின்பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் சுரேஷ், முருகன், காஜாநஜ்முதீன், வள்ளிராஜ், வருவாய் ஆய்வாளா் கருப்பசாமிபாண்டியன் ஆகியோா் கொண்ட குழுவினா் நகா்ப் பகுதியில் ஆய்வு நடத்தினா். அப்போது, பாரதிதாசன் தெரு, கடலையூா் சாலை அலங்காரப் பொருள் விற்பனை கடைகள் மற்றும் காலணி கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா். ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.1000 அபராதம் விதித்தனா்.
மேலும், விதிமீறலுக்காக இரு கடைகளுக்கு தலா ரூ.1000, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத இரு கடைகளுக்கு தலா ரூ.500, முகக்கவசம் அணியாத 22 பேருக்கு தலா ரூ.200 என மொத்தம் ரூ.10,400 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதனிடையே, காவல்துறை, சுகாதாரத்துறை நடத்திய சோதனையில், தேவையின்றி நகரில் சுற்றித்திரிந்த 197 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.