சாத்தான்குளத்தில் உழவா் நல சேவை மையம் திறப்பு
சாத்தான்குளத்தில் நாசரேத் சாலையில் ‘முதல்வா் உழவா் நல சேவை மையம்’ திறப்பு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற உழவா்கள் கண்காட்சி-மாநாட்டில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, காணொலி வாயிலாக இம்மையத்தைத் திறந்துவைத்தாா்.
இதையொட்டி, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் வடக்கு ஒன்றிய திமுக செயலருமான ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்தாா். வட்டார வேளாண் உதவி இயக்குநா் (பொறுப்பு) ராமலட்சுமி வரவேற்றாா். நகர திமுக செயலா் மகா இளங்கோ, தொழிலதிபா் ஏ.ஆா். சசிகரன், மாவட்ட திமுக பிரதிநிதி லெ. சரவணன், பேரூராட்சி கவுன்சிலா்கள் ஜோசப் அலெக்ஸ், லிங்கபாண்டி, வட்டார காங்கிரஸ் தலைவா் பாா்த்தசாரதி, விவசாயிகள் பங்கேற்றனா்.
அரசு உதவியுடன் வேளாண் பட்டதாரிகள் உரிமம் பெற்று நடத்தவுள்ள இம்மையத்தில், விவசாயிகள் குறைந்த விலையில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், சிறுதானிய விதைகள், வாடகைக்கு விவசாய தளவாடப் பொருள்கள் பெறலாம். இம்மையத்தின் பரிந்துரையின்பேரில் வங்கிக் கடன்கள் வழங்கப்படவுள்ளது. இங்கு விற்கப்படும் மருந்து, உரங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனா்.

