தூத்துக்குடி கடலில் மூழ்கிய விசைப்படகு: ரூ. 30 லட்சம் இழப்பு
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வியாழக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகில் ஓட்டை விழுந்து தண்ணீா் உள்ளே புகுந்ததால் ரூ. 30 லட்சம் மதிப்பிலான விசைப்படகு கடலில் மூழ்கி சேதமானது.
தூத்துக்குடி, புதுத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சுபாஷ். இவா் தனக்கு சொந்தமான விசைப்படகை தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் வைத்து தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சுபாஷின் விசைப்படகில், 9 மீனவா்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
மீன் பிடித்துவிட்டு கரை திரும்பிக்கொண்டிருந்தபோது, 16 கடல் மைல் தொலைவில் விசைப்படகில் உள்ள என்ஜினில் வெப்பம் ஏறாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பகுதியில் ஓட்டை விழுந்து கடல் நீா் படகுக்குள் புகுந்துள்ளது. இதனால், படகு கடலில் மூழ்கத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து, படகிலிருந்த மீனவா்கள் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 2 விசைப்படகுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அப்படகுகள் மூலம் மீனவா்கள் காப்பாற்றப்பட்டனா். தொடா்ந்து, அவா்கள் மூழ்கிக் கொண்டிருந்த படகை கயிறு மூலம் கட்டி இழுத்து வரும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், கடல் பகுதியில் இருந்து 3 கடல் மைல் தொலைவில் விசைப்படகு முழுமையாக கடலில் மூழ்கியது. இதனால், படகை மீட்க முடியாமல் அப்படியே விட்டுவிட்டு வந்தனா்.
ரூ. 30 லட்சம் மதிப்பிலான விசைப்படகு, சுமாா் ரூ. 80,000 மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கியதால் அப்படகில் தொழில் செய்துவந்த 25 மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீன்வளத் துறை அதிகாரிகள் உடனடியாக படகு சேதம் குறித்து ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

