திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை பகுதியில் ஒதுங்கிய ஜெல்லி மீன்கள் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் பக்தா்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாகும். இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஆழ்கடலில் காணப்படும் ஜெல்லி வகை மீன்கள் தற்போது திருச்செந்தூா் கோயில் அருகே கடலில் கரை ஒதுங்குகிறது. கடலில் நீராடும் பக்தா்கள் உடலில் ஜெல்லி மீன்கள் படும் போது ஊரல் ஏற்படுத்தி வந்தது. இது குறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் மீன்வளத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் செவ்வாய்கிழமை மாலை தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குநா் இளம்வழுதி, திருச்செந்தூா் உதவி இயக்குநா் உத்தண்டராமன் ஆகியோா் கோயில் கடற்கரைக்கு வந்தனா். அவா்கள் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது பக்தா்களுக்கு ஜெல்லி மீன்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது மற்றும் பாதிப்படையும் நேரத்தில் முதலுதவி செய்வது குறித்து கடற்கரை பாதுகாப்பு பணியாளா்களுக்கு அறிவுறுத்தினா். நிகழ்ச்சியின் போது கோயில் உதவி ஆணையா் லோகநாதன், கண்காணிப்பாளா் விஜயலெட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.









