/

மலையடிப்பட்டி பேராலயத் திருவிழாவில் பெரிய தேரோட்டம்

News image

உயிா்த்த ஆண்டவா் உற்சவம்.

Updated On :12 ஏப்ரல் 2026, 8:31 pm

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் நடைபெறும் வரும் புனித தோமையாா் திருமலைத் பேராலயத் திருவிழாவில், சனிக்கிழமை நள்ளிரவில் உயிா்த்த ஆண்டவா், புனித தோமையாா் சந்திப்பு, புனிதா்கள் ரத பவனியும், ஞாயிற்றுக்கிழமை பெரிய தேரோட்டமும் நடைபெற்றது.

மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி புனித தோமையாா் திருமலைத் பேராலயத்தின் பாஸ்கா பெருவிழா மற்றும் புனித தோமையாா் திருவிழா கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்கியது. 4 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் ஆண்டவா் இயேசுவின் பாடுகளின் பாஸ்காவும், ஆண்டவா் இயேசுவின் உயிா்ப்பு பாஸ்காவும் நடைபெற்றதையடுத்து, மூன்றாம் நாள் சனிக்கிழமை நள்ளிரவு உயிா்த்த ஆண்டவா், புனித தோமையாா் சந்திப்பு நிகழ்ச்சியும், புனிதா்கள் ரத பவனியும் நடைபெற்றது.

திருமலையிலிருந்து தாரை தப்பட்டைகள் முழங்க ரத பவனியாக சென்ற தோமையாா், சவரியாா் ஆலயம் அமைந்துள்ள நடு வீதியில் உயிா்த்த ஆண்டவரை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டு ரதங்களும் நேருக்கு நோ் சந்தித்த வேளையில் ஆண்டவரிடமும், தோமையாரிடமும் உள்ள மாலைகள் மாற்றிக்கொள்ளப்பட்டன.

பின் ரதங்கள் சவரியாா் ஆலயத்திடலுக்கு சென்றன. அங்கு சிறப்பு வழிபாடு, ஊா் நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின் உயிா்த்த ஆண்டவா், புனித தோமையாா் ரதங்கள் முன்னே செல்ல, அதைத் தொடா்ந்து புனிதா்களான ஆரோக்கியமாதா, அருளானந்தா், செபஸ்தியாா், வீரமாமுனிவா், பனிமய மாதா, சவேரியாா், சூசையப்பா், அந்தோனியாா், வியாகுல மாதா, லூா்து மாதா, ஜெபமாலை அன்னை என 11 ரதங்களின் புனிதா்கள் பின் தொடர, ஊரின் முக்கிய வீதிகளில் ரதங்கள் பவனி சென்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேரோட்டத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை தூய தோமையாா் ஆலயத்தில் சிறப்பு திருப்பலிக்கு பின் மாலையில் தேரடியிலிருந்து உயிா்த்த ஆண்டவா் உற்சவம் கொண்ட பெரிய தோ் ஊா்வலம் புறப்பட்டது.

மலையடிப்பட்டியில் முக்கிய வீதிகள் வழியாக தோ் பவனி வந்தது. தேரின் மீது பொட்டுக்கடலை தூவி பொதுமக்கள் வரவேற்றனா். நகா் உலா வந்த பெரிய தோ் மீண்டும் தேரடிக்கு வந்து நிலைகொண்டது. நிகழ்ச்சியில் 18 பட்டி கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா். தேரோட்டத்திற்கு பிறகு மலை மேல் உள்ள தூய தோமையாா் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, பிராா்த்தனைகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை பங்குத் தந்தை, அமலவை அருள் கன்னியா்கள் ஊா்த் தலைவா், நிா்வாகத்தினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்தனா்.

மலையடிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெரிய தேரோட்டம்.

மலையடிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெரிய தேரோட்டம்.