செந்துறை பகுதிக்கு உள்பட்ட ஆனந்தவாடி, கீழமாளிகை, இரும்புலிக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா புதன்கிழமை ஆய்வு செய்தார்.
ஆனந்தவாடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற அவர்,அங்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் வருகைப் பதிவேடு, வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிப்பறை, சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர், அப்பகுதியிலுள்ள அங்கன்வாடி மையம், ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க அறுவுறுத்தினார். மேலும், விடுதியினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க விடுதி காப்பாளருக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, இரும்புலிக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற ஆட்சியர், அங்கு வந்த பொதுமக்களிடம், ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து மருத்துவ வசதிகளும் அளிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
மேலும், 24 மணி நேரமும் செயல்படும் பிரசவ வார்டினை பார்வையிட்டு, கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், கீழமாளிகை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கிணறு அமைக்கும் பணி, வீரக்கான் ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஊராட்சிமன்ற அலுவலக கட்டுமானப் ஆகியவற்றை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன் மற்றும் மருத்துவர், செவிலியர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.