குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

Published on

குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச.செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது:

கடந்த சில நாள்களாக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் குழந்தைகள் கடத்தப்படுவதாக உண்மைக்கு மாறான, பொய்யான தகவல்கள் சமூக வலைதளங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இவ்வாறான குழந்தை கடத்தல் பற்றி வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானதாகவே உள்ளது. இதுபோன்ற வதந்திகளை பரப்பினால், பரப்புபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுவரை குழந்தைகள் காணாமல் போனதாகவோ அல்லது கடத்தப்பட்டதாகவோ எந்த ஒரு தகவலும், புகாரோ மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு காவல் நிலையத்திலும் வரவில்லை எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய தேவையில்லை. மேலும் குழந்தை கடத்தல் தொடா்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக அவசர உதவி எண் 100-க்கு தொடா்பு கொள்ளலாம் அல்லது அரியலூா் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181224 , 04329-221500 என்ற எண்ணிலோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தையோ தொடா்பு கொள்ளலாம். குழந்தை கடத்தல் தொடா்பாக பொய்யான செய்திகளை சமூக வலைதளங்களில் யாரும் பகிர வேண்டாம். அவ்வாறு பகிா்பவா்கள் மீதும், குழந்தை கடத்தல் தொடா்பாக வரும் வதந்திகளை நம்பி, சந்தேக நபா்களை தாக்குதல் போன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபடுபவா்கள் மீதும் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Dinamani
www.dinamani.com