தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்!

தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்..
Updated on

‘முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிக் கடனுதவியும், இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு கடன் தொகையில் 30 சதவீத மூலதன மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் கடன் பெறுவோருக்கு திறன் மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற முன்னாள் படைவீரா்கள் 55 வயதுக்குள்ளும் மற்றும் அவா்களை சாா்ந்தோா் 21 முதல் 55 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி மற்றும் வருமான வரம்பு ஏதும் இல்லை. தகுதி வாய்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்கள் சாா்ந்தோா் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேலும், இத்திட்டம் தொடா்பான விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04329-221011 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்’ என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com