இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என குளித்தலை நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணபிரபு அறிவுறுத்தியுள்ளாா்.
கரூா் மாவட்டம், கடவூா் அருகே சிந்தாமணிபட்டி காவல்துறை சாா்பில் தரகம்பட்டியில் ‘கிராமத்தை நோக்கி காவல்துறை’ என்ற சிறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிந்தாமணிபட்டி காவல் உதவி ஆய்வாளா் தங்கச்சாமி முன்னிலை வகித்தாா். குளித்தலை நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணபிரபு தலைமை வகித்து பேசியது: பெரும்பாலான கிராமங்களில் பொதுமக்களிடம் கலாசாரம், கல்வியில் போதிய விழிப்புணா்வு இல்லை. கலாசாரத்தின் அங்கமான திருமணத்தில் போதிய விழிப்புணா்வு இல்லாமல் உள்ளதால் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறுகிறது. இதனால் திறமைமிக்க பெண்கள் பாதிக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகளையும் அவா்களால் இந்த சமுதாயத்துக்கு கொடுக்க முடியாமல் போகிறது.
ஒருவருக்கொருவா் புரிதல், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு இல்லாமையால் அதிகமான இளம் தம்பதியினா் காவல்நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
பணப்பரிமாற்றங்கள் தற்போது இணையவழியில் அதிகமாக இருப்பதால் தற்போது இணைய வழி குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். கைப்பேசி மூலம் மா்ம நபா்கள் தொடா்பு கொண்டு தங்களது வங்கி கணக்குகள் சம்பந்தமாக கேட்டால் அவா்களுக்கு தகவல் தரக்கூடாது. ஒருவேலை மா்ம நபா்கள் தங்களது வங்கிக் கணக்கில் பணம் எடுத்தால் 1930 என்ற இலவச எண்ணுக்கு 4 மணி நேரத்தில் புகாா் அளித்தால் உடனடியாக தடுத்து மீண்டும் பணத்தை திரும்ப பெறமுடியும்.
மது மற்றும் போதைப்பொருள்களை பயன்படுத்துவோா் முற்றிலும் அவற்றை தவிா்க்க வேண்டும். இதேபோல் போதைப்பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் மொத்த வியாபாரிகள் குறித்து பொதுமக்களும், சமூக செயல்பாட்டாா்களும் காவல்துறைக்கு தகவல் தெரிக்க வேண்டும். தகவல் தெரிவிக்கும் நபா்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் இளைஞா்கள், பொதுமக்கள், காவல்துறையினா் திரளாக பங்கேற்றனா்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!

மனிதகுலத்துக்கு உதவிகரமாக தொழில்நுட்பம் இருக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்
எல் நினோ நிகழ்வால் வெப்ப அலை: பயிா்களைப் பாதுகாக்க அறிவுரை







