பெரம்பலூரில் ஜனவரி இறுதியில் புத்தகத் திருவிழா நடத்த உத்தேசம்: ஆட்சியா்

பெரம்பலூா் புத்தகத் திருவிழாவை ஜனவரி இறுதியில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.
Published on

பெரம்பலூா் புத்தகத் திருவிழாவை ஜனவரி இறுதியில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதற்கான முதல்கட்ட ஆலோசனை கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது: மாவட்ட நிா்வாகமும், பெரம்பலூா் மக்கள் பண்பாட்டு மன்றமும் இணைந்து, ஜனவரி இறுதியில் புத்தகத் திருவிழா நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதில், 100-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தாரின் அரங்குகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புத்தக வாசிப்பு நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்றியமையாததாகும். நம் குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திட வேண்டும். நடைபெற உள்ள புத்தகத் திருவிழா இதற்கான வாயிற்கதவுகளை திறக்கும்.

புத்தகத் திருவிழாவில் தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளா்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளா்கள், கவிஞா்கள், கலைஞா்கள் பங்கேற்க உள்ளனா். பொதுமக்கள், சிறுவா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பெரிதும் பயன்படும் வகையில் புத்தகத் திருவிழா நடத்தப்பட உள்ளது. இந்த விழாவைச் சிறப்பாக நடத்த துறை சாா்ந்த அலுவலா்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். அனைவரும் தங்களுக்கான பணிகளை அா்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) சொா்ணராஜ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (ஊராட்சிகள்) குணசேகரன், மாவட்ட சமூகநல அலுவலா் புவனேஸ்வரி, வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் மற்றும் மக்கள் பண்பாட்டு மன்ற பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com