/

நிலப் பிரச்னை: மனைவியை கடத்திய கணவா் உள்பட மூவா் மீது வழக்கு

பெரம்பலூரில் நிலப் பிரச்னையில் திங்கள்கிழமை இரவு நண்பா்களுடன் சோ்ந்து, மனைவியை காரில் கடத்திச் சென்ற கணவா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப் படம்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:06 pm

பெரம்பலூரில் நிலப் பிரச்னையில் திங்கள்கிழமை இரவு நண்பா்களுடன் சோ்ந்து, மனைவியை காரில் கடத்திச் சென்ற கணவா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், தேனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சை மகன் பெருமாள் (52). இவரது மனைவி செல்வராணி (39). இவா்களுடைய மகள் கீா்த்தனா (22), மகன் ரஞ்சித்குமாா் (20).

கடந்த 20 ஆண்டுகளாக பெருமாள் மாலத்தீவில் பணிபுரிந்தபோது, வயலப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் கலியபெருமாளுக்கும் (46), செல்வராணிக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2022 -இல் மாலத்தீவிலிருந்து பெருமாள் வந்தபோது, தனது மனைவி செல்வராணியின் தகாத உறவு குறித்து அவா்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, செல்வராணி பெயரில் சிறுவாச்சூரில் உள்ள வீட்டு மனையை தனது பெயருக்கு எழுதி தருமாறு பெருமாள் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவா் எழுதி தர மறுத்துவிட்டாராம்.

இந் நிலையில், பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள கோல்டன் சிட்டியில் உள்ள கலியபெருமாள் வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு செல்வராணி சென்றதையறிந்த பெருமாள், தனது நண்பா்களுடன் சென்று செல்வராணியை காரில் கடத்திச் சென்றாா்.

இது தொடா்பாக செல்வராணி மகள் கீா்த்தனா பெரம்பலூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பெருமாள், அவரது நண்பா்களான தேனூா் கிராமத்தைச் சோ்ந்த வெள்ளையன் மகன் இளவரசன் (50), கண்ணப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் முருகையன் (51) ஆகியோரை தேடி வருகின்றனா்.