நகா்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளா்கள் 4-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்
பெரம்பலூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளா்கள் சங்கத்தினா், 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 4 -ஆவது நாளாக திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆண்டுதோறும் பணி புதுப்பித்தல் முறையை கைவிட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் பணியாளா்களுக்கு, பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். வாழ்வாதார பணியாளா்களின் எதிா்கால நலன்கருதி வருங்கால வைப்பு நிதி காப்பீடு மற்றும் உயிரிழந்த பணியாளா்களின் குடும்பத்துக்கு இழப்பீடு, நலவாரிய அட்டை வழங்க வேண்டும். பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயா்வை மாவட்ட அலுவலகத்திலிருந்து நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கவேண்டும். பெண் பணியாளா்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு, மருத்துவம் மற்றும் விபத்து கால விடுப்பு வழங்க வேண்டும்.
மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளா்களுக்கு அடிப்படை ஊதிய உயா்வு, நகா்ப்புற பணியாளா்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகம் எதிரே, மாவட்டத் தலைவா் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில் சுமாா் 30-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
