பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மனக்குமுறல்:கட்சி என்ன வியாபார நிறுவனமா? சொத்து சேர்க்க!

திமுகவின் முன்னாள் மாவட்டச் செயலாளர், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர், தற்போது மாநில நெசவாளர் அணிச் செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். 94 வயதிலும் கட்சிப் பணிகளில் ஈடுபடுபவர்.

Updated On :12 ஏப்ரல் 2016, 7:18 pm

திமுகவின் முன்னாள் மாவட்டச் செயலாளர், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர், தற்போது மாநில நெசவாளர் அணிச் செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். 94 வயதிலும் கட்சிப் பணிகளில் ஈடுபடுபவர்.

1921-ல் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியல் நடந்தது. இந்த மறியலில் ஈடுபட்டமைக்காக தந்தை பெரியார் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த போராட்டத்தில் இவரைக் கண்ட பெரியார், தனது உதவியாளராக அவரது பாசறையில் இணைத்துக்கொண்டார். இதனால் சுமார் ஆறு மாதங்களுக்கும் மேல் அவருடன் தங்கியிருந்தவர். கரூர் தென்னிலையில் சாதி மறுப்பு மாநாடு நடத்தி அந்த காலங்களில் 50-க்கும் மேற்பட்ட சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்தவர். பின்னர் திமுகவில் இணைந்து மிசா காலத்தில் சிறை சென்றவர் என பல அரசியல் அனுபவங்களுக்குச் சொந்தக்காரர் பரமத்தி சண்முகம்.

அவரிடம் பேசியதில் சில பகுதிகள்:

அந்த காலகட்டங்களில் இருந்த அரசியல் நிலைமை வேறு. கட்சியில் கொள்கை பிடிப்பு, லட்சியம் மேலோங்கியிருந்தது. தொண்டர்கள் உணர்வு பூர்வமாக கட்சிப் பணியாற்றினர். கட்சிக்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று தங்களது இன்னுயிரையே இழந்துள்ளனர். ஆனால் இப்போதைய அரசியலில் வேண்டப்பட்டவர், வேண்டப்படாதவர் என்ற கருத்தே பெரும்பான்மையாக உள்ளது. யாரிடத்திலும் உணர்வுப்பூர்வமான சிந்தனை இல்லை. கட்சிகளும் கொள்கைகளை அடமானம் வைத்துவிட்டன. அரசியல் நாகரீகம் மறைந்துவிட்டது. இத்தகைய மோசமான சூழலில்தான் நாம் தேர்தலைச் சந்திக்கிறோம்.

அந்நாளில் அண்ணா, காமராஜர், கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோர் ஒரு ஊருக்கு வந்து பொதுக்கூட்டங்களில் பேசுவதென்றால் குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிட முடியாது. குளித்தலை தொகுதியில் கலைஞர் கருணாநிதி 1957-ல் போட்டியிடுகையில் அவருக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரிக்க மாலை 4 மணிக்கு அண்ணா வருவதாக சுவர் விளம்பரம் செய்திருந்தோம். இதனையறிந்த அப்பகுதியினர் அண்ணாவைப் பார்க்க மாலை 3 மணிக்கெல்லாம் திரண்டிருந்தனர். ஆனால் அண்ணா வருவதற்கு இரவு 12 மணிக்கும் மேலாகிவிட்டது. இருப்பினும் எத்தனை பேர் திரண்டிருந்தார்களோ, அவர்கள் அப்படியே இருந்தனர். இப்போது, தேர்தல் விதிமுறை இரவு அதிக நேரம் பிரசாரத்தை அனுமதிப்பதில்லை என்பது வேறு விஷயம். இப்போது உணர்வுபூர்வமான தொண்டர் கூட்டம் வருகிறதா? இவையெல்லாம் இந்த காலத்தில் சாத்தியமாகுமா?

இப்போது ஒரு கூட்டம் நடத்த ஆட்கள் பலம் காண்பிக்க செலவு செய்கிறார்கள். வாடகைக்கு மக்களை அழைத்து வரும் கலாசாரம் பெருகிவிட்டது. நாளொன்றுக்கு இவ்வளவுத் தொகைத் தருகிறோம், பிரியாணி தருகிறோம் என உறுதி கூறி, முன்பணம் கொடுத்துத்தான் பெரும்பாலான கட்சிகள் அழைத்து வருகின்றன. இதுதான் நவீன அரசியல் கலாசாரம். இன்றைய அரசியல் பணத்திற்கு அடிமையாகி விட்டது. அன்றைய தலைவர்களிடம் பொதுநலம் இருந்தது. இன்றைய தலைவர்களிடம் சுயநலம் அதிகமாகிவிட்டது. பணம் பாதாளம்வரை செல்லும் என்பதற்கேற்ப பணத்தைக் கொண்டு நாட்டின் தலைவிதியையே மாற்றியமைக்கலாம் என்ற நிலையும் வந்துவிட்டது.

முன்பெல்லாம் பொதுமக்களின் நலனுக்காக பாடுபட்டு, சிறை சென்று தலைவர்களானார்கள். ஆனால் இன்று பணம் இருந்தால் கட்சி தொடங்கலாம். கொள்கையைப் பற்றி அக்கறை இல்லை. கட்சி தொடங்கியவுடனே நான்தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள் ஒரு சிலர். கட்சி என்ன வியாபார நிறுவனமா? அரசியலை மூலதனமாக்கிக் கொண்டு பலதலைமுறைகளுக்கு சொத்துச் சேர்க்க நினைக்கலாமா?, இதற்காகத்தான் மக்கள் அவர்களைத் தலைவர்களாக ஏற்றார்களா? ஆனால் அவர்கள் நாங்கள்தான் நாட்டைத் திருத்த வந்த புத்தன் என்கிறார்கள். கட்சிகளின் கொள்கைகள் தடம் மாறிவிட்டன.

- ஏ.அருள்ராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.