புதுக்கோட்டையிலுள்ள கரோனா சிகிச்சை மையத்தின் கழிப்பறையில் கரோனா தொற்றாளர் ஒருவர் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனை வளாகத்தில் கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து வரும் கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆயிங்குடி பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஆண் கடந்த ஜூன் 15ஆம் தேதி சென்னையிலிருந்து திரும்பியவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு கழிப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் இறந்து கிடந்தார். இதைக் கண்ட மற்ற நோயாளிகளும் மருத்துவப் பணியாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை.
புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றாளர் எண்ணிக்கை 100ஐத் தொடவுள்ள நிலையில் ஏற்கெனவே ஒருவர் இறந்துள்ளார். தற்போது மற்றொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.