கண்டங்காரப்பட்டியில் குறுங்காடு அமைக்கும் பணிகள் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் ஊராட்சி கண்டங்காரப்பட்டி கிராமத்தில் 2 ஏக்கா் அரசுப் புறம்போக்கு நிலத்தில், 1,750 மரக்கன்றுகள் உள்ளடக்கிய குறுங்காடு உருவாக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
பல்லுயிா்ப் பெருக்கத்தை வழங்கும் பழ வகை மரக்கன்றுகளும், மழையை வரவழைக்கும் பாரம்பரிய மர வகைகளும் இந்தக் குறுங்காட்டுக்குள் நடவு செய்யப்பட்டது.
மாநகராட்சி மேயா் செ. திலகவதி இப்பணிகளைத் தொடங்கி வைத்தாா். உணவக உரிமையாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் சண்முக பழனியப்பன் முன்னிலை வகித்தாா்.
இந்த உருவாக்கப் பணிகளுக்கான ஏற்பாடுகளை கண்டங்காரப்பட்டி பசுமை நிலம் அறக்கட்டளை, மரம் அறக்கட்டளை, சண்முக பழனியப்பன் இராமு அம்மாள் அறக்கட்டளையினா் ஆகியவை செய்துள்ளனா்.
முன்னதாக பழ. குமரேசன் வரவேற்றாா். மரம் அறக்கட்டளை நிறுவனா் மரம் ராஜா விளக்கவுரை நிகழ்த்தினாா். நிறைவாக கண்டங்காரபட்டி குணசேகரன் நன்றி கூறினாா்.

