தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வேளாண்மை திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நெற்பயிரின் நீர் தேவை ஆகியவை குறித்து சென்னை வேளாண்மை துணை இயக்குநர் (நெல்) ஜார்ஜ்மேனன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார்.
வடக்கு மதுக்கூரில் நடப்பு ராபி பருவத்தில் தேசிய எண்ணெய்வித்து உற்பத்தி இயக்க திட்டத்தின்கீழ், ஆழச்சால் அகலப் பாத்தி விதைப்பு முறையில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள மூர்த்தி என்பவரின் வயலில் ஜிப்சம் இட்ட செயல்விளக்க திடலை அவர் பார்வையிட்டு தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினார்.
நிலக்கடலையில் நீர் மேலாண்மை, பயிர்ப் பாதுகாப்பு, களை மேலாண்மை முறைகள் மற்றும் மகசூல் விவரம் குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து பெரியக்கோட்டை கிராமத்தில் நீரின்றி காய்ந்து வரும் மணிக்கட்டும் பருவத்திலுள்ள சம்பா நெற்பயிரின் நிலை மற்றும் நீர் தேவை ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டார். வேளாண்மை உதவி அலுவலர்களின் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டத்தின் சாதனை விவரத்தையும் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, வேளாண்மை உதவி இயக்குநர்கள் வை.தயாளன் (மதுக்கூர்), எஸ்.ஈஸ்வர் (பட்டுக்கோட்டை), மதுக்கூர் வேளாண்மை அலுவலர் நவீன்சேவியர், துணை வேளாண்மை அலுவலர் கலைச்செல்வன், உதவி விதை அலுவலர் ராஜேந்திரன், வேளாண்மை உதவி அலுவலர்கள் அன்புமணி, பாபி, அட்மா திட்ட அலுவலர் பெனிக்சன் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.