
தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:
மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகத்தின் கூட்டம் வியாழக்கிழமை (செப்.6) பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் புதுதில்லியில் நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஏற்கெனவே தமிழ்நாட்டில் பெட்ரோலியம், மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஏலமெடுத்துள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அதன்படி முதல் கட்டமாக, மரக்காணத்திலிருந்து கடலூர் வரை உள்ள வட்டாரத்தையும், பரங்கிப்பேட்டையிலிருந்து வேளாங்கண்ணி வரையுள்ள இன்னொரு வட்டாரத்தையும் இரு நிறுவனங்களுக்குக் கொடுக்கின்றனர். இப்பகுதிகள் அனைத்தும் விவசாய நிலங்கள் நிறைந்துள்ள வேளாண் மண்டலம்.
இப்பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்தினால், வேளாண்மை முழுமையாக அழிந்துவிடும். கிராமங்கள் காலி செய்யப்படும். நிலத்தடி நீர் மாசுபடும். ஆறுகள் மற்றும் கால்வாய்களின் நீரோட்டங்கள் தடுக்கப்படும் அல்லது திசைமாற்றப்படும். மக்கள் வேறு வழியின்றி வெளியேற வேண்டிய நிலை உருவாகும். தமிழ்நாட்டு மண்ணின் வளத்தை அழித்து, மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி, தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். இத்திட்டத்தை எதிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் மட்டும் போராடுவர் என்ற நிலையை மாற்றி, ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் இத்திட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





