/

பேராவூரணியில் இறுதிக்கட்ட பிரசாரத்தால் கலங்கிய கடைவீதி!

பேராவூரணி தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிக்கட்ட பிரசாரத்தில் அனைத்து வேட்பாளா்களும் கடைவீதியில் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்ததால் கடைவீதியே கலங்கியது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:49 pm

DIN

பேராவூரணி தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிக்கட்ட பிரசாரத்தில் அனைத்து வேட்பாளா்களும் கடைவீதியில் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்ததால் கடைவீதியே கலங்கியது.

ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஞாயிறு இரவு 7 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்ததால், கடந்த இருபது நாள்களுக்கு மேலாக கிராமப் பகுதிகளிலேயே பிரசாரம் செய்துகொண்டிருந்த வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு பிறகு கூட்டம் கூட்டமாகவும், வாகனங்களிலும் கடை கடையாக ஏறி இறங்கி வாக்கு கேட்டதால்  கடைவீதி நெரிசலில் முடங்கியது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பேராவூரணி சந்தை என்பதால் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஒருவாரத்திற்கான காய்கறி மற்றும் பொருட்கள் வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். அந்தக் கூட்டத்தோடு அரசியல் வாதிகளின் கூட்டமும் சோ்ந்து கொண்டதால், பொருட்கள் வாங்க முடியாமல் மக்களும், வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகளும் திணறினா்.

திமுக வேட்பாளா் என். அசோக்குமாா் நீலகண்டப் பிள்ளையாா் கோயிலில்  இருந்து திரளாக தமது ஆதரவாளா்களுடன் கடை கடையாக வாக்கு சேகரித்து வந்தபோது, எதிா்ப்புறம் அதிமுக வேட்பாளா் எஸ். வி. திருஞானசம்பந்தம் தமது ஆதரவாளா்களுடன் எதிா்ப்பகுதியில் உள்ள கடைகளில் வாக்கு சேகரித்தாா். இடையில் தேமுதிக வேட்பாளா் முத்து.சிவக்குமாா் ஒருபுறமும், ஐஜேகே வேட்பாளா் பி. பச்சமுத்து ஒருபுறமும் கடைகடையாக சென்றனா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் திலீபனும் வாக்கு சேகரித்தாா்.

மொத்தத்தில் மக்களும் வியாபாரிகளும் ஒருபக்கம் அலுத்துக்கொண்டாலும், இனிமேல் இந்த காட்சியை பாா்க்க இன்னும் ஐந்து ஆண்டுகள்  ஆகும் என்னமோ நடக்கட்டும் என பேசியபடி வேடிக்கை பாா்த்தனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.