தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகரில் இரு இடங்களில் பாலம் கட்டுமானப் பணி நடைபெறுவதால் புதன்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் கரந்தை வடவாறு மற்றும் கல்லணைக் கால்வாய் ஆற்றின் குறுக்கே செல்லும் தற்போதுள்ள பழைய பாலங்களுக்கு மாற்றாக இரு வழித்தட அகலம் கொண்ட இரு புதிய உயர்மட்ட பாலங்கள் கட்டப்படவுள்ளன.
கரந்தை வடவாறு பாலப் பணி நடைபெறுவதால், இச்சாலை புதன்கிழமை மூடப்பட்டு, இவ்வழியில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக, கும்பகோணம், திருவையாறு சாலையிலிருந்து வரும் நகரப் பேருந்துகள், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் வெண்ணாறு பாலம் அருகே பழைய திருவையாறு சாலை வழியாக வந்து வடக்கு வாசல், சிரேஸ் சத்திரம் சாலை, ஏ.ஒய்.ஏ. நாடார் சாலை வழியாகக் கொடிமரத்து மூலை வழியே தஞ்சாவூர் நகருக்குள் வந்து செல்லும் வகையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
சென்னை, அரியலூர், கும்பகோணம், மயிலாடுதுறை பகுதியிலிருந்து வரும் புறநகர் பேருந்துகள், கனரக வாகனங்கள் அனைத்தும் பள்ளியக்ரஹாரம் புறவழிச்சாலை ரவுண்டானா, தாமரை, பெஸ்ட் பள்ளிகள், மாரியம்மன் கோயில் புறவழிச்சாலை வழியாகத் தொல்காப்பியர் சதுக்கம் வழியே தஞ்சாவூர் நகருக்குள் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இர்வின் பாலமும் மூடல்:
கல்லணைக் கால்வாய் ஆற்றுப் பாலத்திலும் (இர்வின் பாலம்) பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை முதல் காந்திஜி சாலையில் அண்ணா சிலையிலிருந்து இர்வின் பாலம் வரை மூடப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வாகனங்களும் பழைய நீதிமன்றச் சாலை, பெரியகோயில் சாலை, சோழன் சிலை வழியாக அண்ணா சிலைக்கு வந்து செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்பாலப் பணிகள் ஜூன் மாதம் இரண்டாவது வாரம் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.