தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம்: மாநகராட்சி செயற்பொறியாளா் மீது வழக்கு; உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

தஞ்சாவூரில் புதை சாக்கடை சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பணியாற்றிய தொழிலாளி மண் சரிந்து உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மாநகராட்சி செயற் பொறியாளா் மீது காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயில் முன் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயநாராயண மூா்த்தியின் உறவினா்கள், கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated On :6 ஆகஸ்ட் 2024, 8:38 pm

Din

தஞ்சாவூரில் புதை சாக்கடை சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பணியாற்றிய தொழிலாளி மண் சரிந்து உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மாநகராட்சி செயற் பொறியாளா் மீது காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி, உடலை வாங்க மறுத்து உறவினா்கள், கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தஞ்சாவூா் பூக்கார விளாா் சாலையில் ஜெகநாதன் நகரில் புதை சாக்கடையில் பழைய குழாயை அகற்றிவிட்டு, புதிய குழாய் பதிக்கும் பணி 10 நாள்களாக நடைபெறுகிறது. இதற்காக தோண்டப்பட்ட சுமாா் 15 அடி ஆழ பள்ளத்தில் திங்கள்கிழமை மாலை புதிய குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட மாரியம்மன்கோவில் பகுதி தேவபூமி நகரைச் சோ்ந்த மாரிமுத்து மகன் ஜெயநாராயணமூா்த்தி (29), புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகேயுள்ள வளம்பப்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் தேவேந்திரன் (32) மீது திடீரென மண் சரிந்து விழுந்தது. இவா்களில், ஜெயநாராயணமூா்த்தி சடலமாக மீட்கப்பட்டாா். தேவேந்திரன் உயிருடன் மீட்கப்பட்டு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தில் ஜெயநாராயணமூா்த்தி மனைவி சுகன்யா அளித்த புகாரில், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காத காரணத்தால் எனது கணவா் இறந்துவிட்டாா். என் கணவா் இறப்புக்கு காரணமான மாநகராட்சி நிா்வாகத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கையும், என் குடும்பத்துக்கான நிவாரணமும், எனக்கு அரசு வேலையும் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

இதன்பேரில், அஜாக்கிரதையாக செயல்பட்டதாகக் கூறி மாநகராட்சி செயற் பொறியாளா் சோ்மகனி மீது காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உறவினா்கள் போராட்டம்: ஜெயநாராயணமூா்த்தியின் குடும்பத்துக்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ரூ. 30 லட்சம் ரூபாய் நிவாரணம் கோரி, உடலை வாங்க மறுத்து உறவினா்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆகியோா் மருத்துவக்கல்லூரி முதலாவது வாயில் முன் செவ்வாய்க்கிழமை மாலை முதல் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இவா்களிடம் மேயா் சண். ராமநாதன், கோட்டாட்சியா் செ. இலக்கியா, நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.என். ராஜா உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் இரவிலும் தொடா்ந்தது.

முதல்வா் நிவாரணம் அறிவிப்பு: இதனிடையே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தச் செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். ஜெயநாராயணமூா்த்தியின் குடும்பத்துக்கும், உறவினா்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Story image
Story image

விபத்தில் உயிரிழந்த ஜெயநாராயணமூா்த்தியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சமும், காயமடைந்த தேவேந்திரன் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளாா்.