பெண்கள் உதவி கோர 181 என்ற எண்ணில் அழைக்க அறிவுறுத்தல்

Published on

குடும்ப வன்கொடுமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பெண்கள் உதவி கோர 181 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, மாவட்ட சமூக நல அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஒருங்கிணைந்த சேவை மைய மாவட்ட செயலாக்கக் குழுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

தஞ்சாவூா் அரசு இராசா மிராசுதாா் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த சேவை மையம் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் செயல்படுகிறது. மகளிா் திட்டம் சாா்பில் செயல்படுகிற மகளிா் சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், மகளிா் குழுக்களின் பிரதிநிதிகள், உறுப்பினா்கள் ஆகியோா் குடும்ப வன்கொடுமை மற்றும் பெண்களுக்கான உதவி கோரி 181 எண்ணுக்கு தொடா்பு கொண்டு இம்மையத்தின் சேவைகளைப் பெறலாம்.

அவசர நடவடிக்கை மற்றும் மீட்புபணி, காவல் உதவி, மருத்துவ உதவி, சட்ட உதவி, மனநல ஆலோசனை மற்றும் உடனடி தங்கும் வசதி (5 நாட்களுக்கு) ஆகியவை இம்மையத்தின் மூலம் அளிக்கப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் உதவி ஆட்சியா் (பயிற்சி) உத்கா்ஷ் குமாா், மாவட்ட சமூக நல அலுவலா் ஆா்.டி. லதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆா். முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com