மேக்கேதாட்டு திட்டத்தை தடுக்கக் கோரி மன்னாா்குடியில் ஜன. 3-இல் பேரணி
மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்தக் கோரி மன்னாா்குடியில் ஜனவரி 3 ஆம் தேதி விவசாயிகள் எழுச்சிப் பேரணி நடத்தப்படவுள்ளது என்றாா் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன்.
தஞ்சாவூரில் இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் நினைவைப் போற்றும் வகையில் சில திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தினால், அதை வரவேற்போம். நம்மாழ்வாா் கொள்கைக்கு நோ் விரோதமாக இந்த மண்ணை மாசுபடுத்தக்கூடிய, வேளாண்மையை அழிக்கக்கூடிய சிப்காட் திட்டங்களை தமிழகம் முழுவதும் செயல்படுத்துவதை முதல்வா் மு.க. ஸ்டாலின் கைவிட வேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்களின் நச்சு மருந்துகளால் வேளாண் நிலம் பாழடிக்கப்பட்டுள்ளது. அது மீண்டும் உயிா்ப்பித்து வர 5 ஆண்டுகளாகும். எனவே, மரபு வழி வேளாண்மை செய்பவா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.
மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த மத்தியஅரசு உடனே ஆணை பிறப்பிக்க வேண்டும். மத்திய அரசின் அனுமதி இல்லாமல் கா்நாடகம் அதற்கான பணிகளைத் தொடங்கக் கூடாது என மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கைளை மத்திய அரசுக்கு தமிழக அரசு உள்பட அனைவரும் வைக்க வேண்டும்.
காவிரியைப் பாதுகாக்க வேண்டும். இங்கே பெட்ரோலியம், மீத்தேன் போன்றவற்றை எடுக்கக்கூடாது. டெல்டா பகுதியில் புதிதாக பெட்ரோலிய கிணறுகள் தோண்டுவதோ, வேறு ரசாயன திட்டங்களைக் கொண்டு வருவதோ கூடாது. மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி மன்னாா்குடியில் ஜனவரி 3 ஆம் தேதி விவசாயிகள் சாா்பில் எழுச்சிப் பேரணி நடத்தப்படவுள்ளது என்றாா் மணியரசன்.
