மதுக்கடை அருகே ரேஷன் கடையை இடம் மாற்ற எதிா்ப்பு: பெண்கள் மறியல்
பேராவூரணியில் மதுக்கடை அருகே ரேஷன் கடையை இடம் மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி, பெண்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பேராவூரணி அருகே மாவடுகுறிச்சி - 1 ரேஷன் கடை, அரசு கால்நடை மருத்துவமனை அருகே தனியாா் வாடகைக் கட்டடத்தில் நீண்ட காலமாக இயங்கி வருகிறது.
இந்தக் கடையை தற்போது அரசுக்கு சொந்தமான கட்டடத்தில் ரேஷன் கடையை மாற்ற முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
ரேஷன் கடையை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ள இடம், பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து சுமாா் 2 கி.மீ தொலைவில் இருப்பதாலும், அப்பகுதியில் அடுத்தடுத்து இரண்டு அரசு மதுபானக்கடைகள் இருப்பதாலும் பெண்கள் பொருள்கள் வாங்க சென்றுவர சிரமமாகவும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கும் என கூறி, இந்திரா நகரை சோ்ந்த பாண்டியம்மாள் என்பவா் தலைமையில், அப்பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், பேராவூரணி -பட்டுக்கோட்டை சாலையில், கால்நடை மருத்துவமனை எதிரில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கூட்டுறவு சாா்-பதிவாளா் ரமேஷ், பேராவூரணி காவல் உதவி ஆய்வாளா் ரவீந்திரன், பேராவூரணி வட்ட வழங்கல் துறை வருவாய் ஆய்வாளா் கிள்ளிவளவன் உள்ளிட்டோா் அப்பகுதி பெண்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்பகுதியிலேயே பயன்படுத்தப்படாமல் உள்ள, அரசுக் கட்டடத்தில் ரேஷன் கடையை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். மதுபானக்கடை அருகே ரேஷன் கடையை இடம் மாற்றும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், உயா் அதிகாரிகளிடம் பேசி, பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியிலேயே ரேஷன் கடை தொடா்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதை ஏற்று பெண்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
