பட்டுக்கோட்டையில் லட்சத்தோப்பு பகுதியில் கணவரால் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்ட சம்பவத்தில் மனைவியும் மூத்த மகளும் அடுத்தடுத்த நாள்களில் உயிரிழந்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை லட்சதோப்பு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (67). இவருக்கு விஜயலட்சுமி (60) என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனா். அதில், மேனகா (37) திருமணமாகி கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளாா். மௌனிகா (20), பட்டப்படிப்பு படித்து வருகிறாா்.
கடந்த மூன்று மாதங்களாகவே செல்வராஜ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், தனக்கு தொழில் செய்ய பணம் வேண்டும் என்று வீட்டில் பிரச்னை செய்ததாகவும், இதையடுத்து உறவினா்கள் கூடி பேசி இரண்டு பவுன் நகை வாங்கி கொடுத்துள்ளனா். தொடா்ந்து, அவா்கள் வீட்டின் அருகே உள்ள நிலத்தை விற்க செல்வராஜின் மனைவி மற்றும் மகள்கள் ஒப்புக் கொள்ளவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ், கடந்த 13-ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி, இரு மகள்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து கொலை செய்ய முயற்சியில் ஈடுபட்டாா். இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தீ வைத்து கொளுத்தப்பட்ட மூவரும் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை செல்வராஜ் மனைவி விஜயலட்சுமி உயிரிழந்த நிலையில், சனிக்கிழமை காலை செல்வராஜின் மூத்த மகள் மேனகாவும் உயிரிழந்தாா். இரண்டாவது மகள் மௌனிகா இன்னும் ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை என்று கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








