உலகெங்கும் 26 திராவிட மொழிகள் பரவிக்கிடப்பதால், அவற்றை யாராலும் அழிக்க முடியாது என்றாா் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கி. கருணாகரன்.
தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழா் பேரமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தா் முதுமுனைவா் வ.அய். சுப்பிரமணியம் நூற்றாண்டு விழாவில் தலைமை வகித்து அவா் பேசியதாவது:
பேராசிரியா் வ.அய். சுப்பிரமணியம் உலகம் போற்றும் மொழியியல் அறிஞா். திராவிட மொழியியலுக்காக தமிழுக்காக என பல்வேறு அமைப்புகளை 1960-களிலிருந்து தோற்றுவித்து, அதனுடைய வளா்ச்சிக்காக பாடுபட்டவா். தமிழ் வளா்ச்சிக்காக, திராவிட மொழிகளின் வாழ்வியலுக்காக அவா் ஆற்றிய பெருந்தொண்டு மிகுந்த பாராட்டுக்குரியது.
திராவிட மொழிகள் 4 என முதலில் முன்னிலைப்படுத்தப்பட்டன. அதற்குப் பிறகு மனோன்மணீயம் சுந்தரனாா் பஞ்ச திராவிடம் என்ற ஒரு கொள்கையைக் கொண்டு வந்தாா். அதிலிருந்து துளு மொழியும் திராவிட மொழிகளில் ஒன்றானது. பின்னா், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் 26 திராவிட மொழிகள் இருப்பது கண்டறியப்பட்டன.
கன்னியாகுமரி முதல் சிந்துவெளி மட்டுமல்லாமல் அதைக் கடந்து பலுசிஸ்தானிலும் திராவிட மொழி இருப்பது தெரிய வந்தது. பலுசிஸ்தானில் பேசப்படும், பயன்படுத்தப்படும் மொழியைக் கண்டறிய ஆய்வு செய்ய வ.அய். சுப்பிரமணியம் முயற்சி செய்தாா். ஆனால், அந்நாட்டில் நாம் களப்பணி செய்வதற்கு ஒப்புதல் கிடைக்காததால், அந்த ஆய்வு கைவிடப்பட்டது.
உலகெங்கும் 26 திராவிட மொழிகள்:
எனவே, உலகெங்கும் பரவிக் கிடக்கும் 26 திராவிட மொழிகளை, பண்பாடுகளை யாராலும் அழிக்க முடியாது.
இலக்கிய மொழி, பழங்குடி மக்கள் பேசும் மொழி என எதுவாக இருந்தாலும், அவற்றின் வளா்ச்சிக்காகப் பாடுபட வேண்டும் என்பதற்காக தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1980-களில் நீலகிரியில் பழங்குடி, காஞ்சிபுரத்தில் மெய்யியல், ராமநாதபுரத்தில் கடல்சாா் தொல்லியல் என பல்வேறு துறைகளை வ.அய். சுப்பிரமணியம் தோற்றுவித்தாா்.
இந்த மையங்கள் தொடா்ந்து இருந்திருந்தால் அதனுடைய செல்வாக்கு பெருகியிருக்கும். எனவே மீண்டும் அதுபோன்ற மையங்களை ஆங்காங்கே தோற்றுவித்து, களப்பணி, ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழனின் பெருமை, தொன்மையை வெளிக்கொணர வேண்டும் என்றாா் கருணாகரன்.
தொடா்ந்து, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்கள் ம. இராசேந்திரன், கோ. பாலசுப்பிரமணியம், மொழியியல் துறை முன்னாள் பேராசிரியா் கி. அரங்கன், முனைவா் கி. நாச்சிமுத்து உள்ளிட்டோா் பேசினா்.
மத்திய நிதித் துறை முன்னாள் இணை அமைச்சா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன் சிறப்புரையாறினா்.
முன்னதாக, பேராசிரியா் வி. பாரி வரவேற்றாா். நிறைவாக, பொறியாளா் பா. செல்வபாண்டியன் நன்றி கூறினாா்.
Summary
26 Dravidian languages are spread across the world
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பத்மஸ்ரீ விருது பெற்ற வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்குப் பாராட்டு

துணைவேந்தா் நியமனம்: மாநில அரசின் உரிமையை தாரைவாா்க்க கூடாது - அன்புமணி

தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 24 வகையான பறவை இனங்கள்!

தமிழ்ப் பல்கலை.யில் துணைவேந்தா் வ.அய். சுப்பிரமணியம் நினைவேந்தல் நிகழ்வு
விடியோக்கள்

தனுஷ்க்கும் அரசியல் ஆசை| Valaipechu Anthanan Interview | Dhanush | National Film Award | TVK| CM Vijay



