தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் நேர பிரச்னையால் சிற்றுந்து ஓட்டுநா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விரிவுபடுத்தப்பட்ட சிற்றுந்துகளின் வழித்தடத் திட்டத்தின் மூலம் தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 50-க்கும் அதிகமான சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பழைய பேருந்து நிலையத்துக்குள் போதிய இட வசதி இல்லாததாலும், நேர பிரச்னை காரணமாகவும் பேருந்து ஓட்டுநா்களுக்கும், சிற்றுந்து ஓட்டுநா்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது.
இதேபோல, வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் அரசு பேருந்து ஓட்டுநா்களுக்கும், சிற்றுந்து ஓட்டுநா்களுக்கும் நேர பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால், சிற்றுந்து ஓட்டுநா்கள் சுமாா் 10 சிற்றுந்துகளை ஆங்காங்கே நிறுத்தி, அரசுப் பேருந்துகளுக்கு வழிவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக பயணிகள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகினா்.
தகவலறிந்த காவல் துறையினா் பழைய பேருந்து நிலையத்துக்கு சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவாா்தை நடத்தியதையடுத்து, 30 நிமிஷங்களுக்கு பிறகு மீண்டும் சிற்றுந்துகள் இயக்கப்பட்டன.
இது குறித்து சிற்றுந்து ஓட்டுநா்கள் கூறுகையில், பழைய பேருந்து நிலையத்துக்குள் அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் சிற்றுந்துகளுக்கு வழி விடாமல் இயக்குவதால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றனா்.
இதேபோல, அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் கூறுகையில், பழைய பேருந்து நிலையத்துக்குள் சிற்றுந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைப்பதால், நகரப் பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்க முடியவில்லை. இதனால், அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. எனவே, பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், அருகிலுள்ள மாநகராட்சி இடத்தைச் சிற்றுந்துகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றனா்.










