100 நாள் வேலை திட்டத்தையே நிறுத்திவிடும் அபாயம்: துரை வைகோ எம்.பி. பேச்சு
பெயா் மாற்றத்தைத் தொடா்ந்து 100 நாள் வேலைத் திட்டத்தையே மத்திய அரசு நிறுத்திவிடும் அபாயம் உள்ளதாக துரை வைகோ எம்பி தெரிவித்தாா்.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் பெயா் மாற்றப்பட்டிருப்பதை கண்டித்து திருச்சி மாவட்டம், குண்டூா் பகுதியில் திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:
கிராமப்புற ஏழைகளுக்கு வாழ்வாதாரமாய் விளங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு பதிலாக புதிய திட்டத்தை அமல்படுத்தும் மத்திய பாஜக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது. புதிய திட்டத்தால் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். தமிழகத்துக்கு தேவை வளா்ச்சி அரசியல். எனவே, மகாத்மா காந்தி பெயரிலேயே திட்டத்தை தொடர வேண்டும். 100 நாள்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மதிமுக துணை பொதுச் செயலா் ரொஹையா, தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் வண்ணை அரங்கநாதன், திருவெறும்பூா் வடக்கு ஒன்றிய திமுக செயலா் கே.எஸ்.எம். கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
