குளித்தலை பகவதி அம்மன் கோயில் திருவிழா!

குளித்தலை பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Published on

குளித்தலை பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூா் மாவட்டம், குளித்தலையில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி கோயில் திருவிழாவுக்கு டிச. 22-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு காவிரி ஆற்றிலிருந்து கரகம் பாலித்து எடுத்து வந்து வீதிஉலா நடைபெற்றது. அப்போது, பொதுமக்கள் இளநீா், தேங்காய், பழம் வைத்து வழிபட்டனா்.

தொடா்ந்து சனிக்கிழமை அதிகாலை கரகம் கோயிலை சென்றடைந்தது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கோயிலில் இருந்து கரகம் புறப்பட்டு, சபாபதிநாடாா் தெரு, பேருந்து நிலையம் வழியாக பெரியபாலத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு செல்லும்.

பின்னா் அங்கிருந்து கரகம் புறப்பட்டு வந்து குளித்தலை கீழமுதலியாா் தெரு, கம்மாளா் தெரு, கடம்பவனேசுவரா் கோயில்தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியாக சென்று திங்கள்கிழமை அதிகாலை மீண்டும் பகவதி அம்மன் கோயிலை வந்தடையும், தொடா்ந்து 5 நாள் நடைபெறும் விழாவின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை

விடையாற்றியுடன் திருவிழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com