சட்டக் கல்லூரி மாணவா்கள் காத்திருப்புப் போராட்டம்
சட்டக் கல்லூரிகளில் மூன்றாண்டுகள் பிரிவில் படிக்கும் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்கக் கோரி சட்டக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி ரேஸ்கோா்ஸ் பகுதியிலுள்ள சட்டக் கல்லூரி முன்பு 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.
இதுகுறித்து மாணவா்கள் கூறியதாவது:
தமிழகத்தில் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டுகள் பிரிவில் இறுதியாண்டு படிக்கும் மாணவா்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்றாண்டுகள் பிரிவில் படிக்கும் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. இது மாணவா்களை வஞ்சிக்கும் செயலாகும். மூன்றாண்டுகள் பிரிவில் படிக்கும் மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

