செய்யாறு, செப். 23: பெண் வாக்காளர்கள் அதிகம் கொண்ட நகராட்சியாக திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி இருந்து வருகிறது.
பேரூராட்சியாக இருந்த திருவத்திபுரம் 1978-ல் 3-ம் நிலை நகராட்சியாகவும், 1993-ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும் நிலை உயர்த்தப்பட்டது.
இந் நகராட்சியில் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பெண்கள் 19,005 பேர், ஆண்கள் 18,766 பேர் என மொத்தம் 37,771 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெண் வாக்காளர்கள் 13,533 பேர், ஆண் வாக்காளர்கள் 13,011 பேர் என மொத்தம் 26,544 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 522 பேர் அதிகம் உள்ளனர்.
திருவத்திபுரம் நகராட்சியாக நிலை உயர்த்தப்பட்ட பிறகு, நகர்மன்றத் தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் 3 முறையும் அதிமுகவைச் சேர்ந்தவர் ஒரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் திருவத்திபுரம் நகராட்சித் தலைவர் பதவி பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பாவை ரவிச்சந்திரன், திமுக சார்பில் முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் மோகனவேலின் மனைவி பேபி என்பவரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.