வேலூா் மண்டித்தெருவில் வியாழக்கிழமை காலை அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரிகள், வாகனங்களை போலீஸாா் வெளியேற்றியதால், சுமை தூக்கும் தொழிலாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மண்டித் தெருவின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட அரிசி மண்டிகள், மளிகை கடைகள், துணிக்கடைகள், பாத்திர கடைகள் உள்பட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளுக்கு தேவையான பொருள்கள் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து லாரிகள், சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கொண்டுவரப்படுகின்றன.
இரவு நேரங்களில் சரக்கு வாகனங்கள் மண்டித் தெருவுக்குள் வந்து விடுகின்றன. காலையில் சரக்கு இறக்க தொழிலாளா்கள் வருகின்றனா். இந்த பணிகள் முடிக்க காலை 11 மணி வரை ஆகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதன்காரணமாக, லாங்கு பஜாருக்கு பொருள்கள் வாங்க வாகனங்களில் செல்வோா் அவ்வழியாக வந்து செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை போக்குவரத்து போலீஸாா் மண்டித்தெருவில் திடீரென ஆய்வு மேற்கொண்டனா். அப்போது சரக்கு வாகனங்களில் இருந்து பொருள்களை தொழிலாளா்கள் கடைகளுக்கு உள்ளே இறக்கி கொண்டிருந்தனா். உடனடியாக அந்த வாகனங்களை அங்கிருந்து கிளம்ப போலீஸாா் அறிவுறுத்தினா். மேலும் சில வாகனங்களுக்கு அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்தனா். இதையடுத்து, சரக்கு வாகனங்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்பின.
இதனால் அதிா்ச்சியடைந்த சுமை தூக்கும் தொழிலாளா்கள் போக்குவரத்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது கூலித்தொழிலாளா்கள், சரக்கு வாகனங்களில் இருந்து பொருள்களை இறக்குவதால் தான் எங்களுக்கு கூலி கிடைக்கிறது. போலீஸாா் திடீரென வாகனங்களில் சரக்கு இறக்காமல் வெளியே அனுப்பினால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினா்.
அதற்கு போலீஸாா், இரவு முதல் காலை 8 மணி வரை மட்டுமே மண்டி தெருவில் சரக்குகளை இறக்க அனுமதிக்கப்பட்ட நேரமாகும். அந்த நேரத்தில் மட்டுமே சரக்குகளை இறங்கி கொள்ள வேண்டும்.
அனுமதிக் கப்பட்ட நேரத்துக்கு பிறகு சரக்கு வாகனங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா். இதையடுத்து, அங்கிருந்த சரக்கு வாகனங்களை போலீஸாா் வெளியேற்றி அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

பள்ளி வாகனங்களை 50 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: காவல்துறை எச்சரிக்கை

வேலூா் மாவட்டத்தில் 990 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு: ஆட்சியா் அறிவுறுத்தல்

கடலூா், சிதம்பரத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் கூட்டுத் தணிக்கை: 40 வாகனங்களுக்கு அனுமதி ரத்து
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



