இறால் குட்டைகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் புகார் அளித்தனர்.
சிதம்பரம் வட்டம், தாண்டவராயன் சோழகன்பேட்டை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் அளித்த மனு: எங்களது கிராமத்திலுள்ள சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் விவசாயம், மீன்பிடித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கருங்கால் ஆறு முதல் காகாத்தி வனத் துறை காடுகள் வரை உள்ள பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட இறால் குட்டைகள் வெட்டப்பட்டுள்ளன.
இவற்றில் புதிய இன இறால்கள் ஆண்டு முழுவதும் வளர்க்கப்படுகின்றன. 500 அடி ஆழ ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் முழுவீச்சில் எடுக்கப்பட்டு, இறால் பண்ணைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைவதுடன், குட்டைகளில் தேங்கி நிற்கும் உபரிநீர் விவசாய நிலங்களிலும், கிராம குடியிருப்புப் பகுதிகளிலும் ஊடுருவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறால் குட்டைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் ஆறுகளிலும், நல்ல தண்ணீர் ஆதாரமான ஓடை, குளங்களிலும் வெளியேற்றப்படுகிறது. இதனால், குடிநீர் வீணாகிறது. தில்லைவனங்கள், சுரபுண்ணை, சின்னகொடா, பெரியகொடா ஆகிய காடுகளும் அழிந்து வருகின்றன.
இதனால், கிராம மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, விதிகளை மீறும் இறால் பண்ணைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









