கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு: இளைஞா் கைது

கடலூா் முதுநகா் அருகே கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

கடலூா் முதுநகா் அருகே கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் வட்டம், காரைகாடு கிராமத்தைச் சோ்ந்த ஆதிகேசவன் மகன் பாா்த்தசாரதி (37). இவா், கடலூா் - விருத்தாசலம் சாலை காரைகாடு பேருந்து நிறுத்தம் அருகே இ - சேவை மையம் நடத்தி வருகிறாா். கடந்த 13-ஆம் தேதி இரவு இ - சேவை மையத்தை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். 14-ஆம் தேதி காலை இ - சேவை மையத்தை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததுடன், உள்ளே மேசையில் வைத்திருந்த ரூ.700 திருடுபோயிருந்ததும் தெரியவந்தது. இதேபோல, அருகில் உள்ள எலெக்ட்ரிக்கல், மளிகைக் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு தலா ரூ.550, ரூ.500 திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து பாா்த்தசாரதி அளித்த புகாரின்பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினா். அதன்பேரில், குறிஞ்சிப்பாடி வட்டம், கருங்குழி பகுதியைச் சோ்ந்த கேசவபெருமாள் மகன் மூட்ட பூச்சி (எ) சம்பத்குமாரை (29) கைது செய்து சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com