கடலூா் முதுநகா் அருகே தனியாா் பள்ளியின் மாடியில் நின்று மரக்கிளை வெட்டிய ஓட்டுநா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
கடலூா், கூத்தப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சுப்பராயலு (63), பல ஆண்டுகளாக கடலூா் முதுநகரில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் குடும்பத்துடன் தங்கி வசித்து வந்தவா், பள்ளி வாகன ஓட்டுநராகவும், சிறுசிறு வேலைகளை செய்து வந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளைகளை வெட்டுவதற்காக அங்குள்ள கட்டடத்தின் மேல் மாடியில் நின்று மரக்கிளையை வெட்டினாா்.
அப்போது, தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.