
நெய்வேலி அருகே போலீஸாரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரௌடி சுட்டுப்பிடிப்பு
நெய்வேலி அருகே புதன்கிழமை அதிகாலை போலீஸாரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற ரௌடியை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.

ரெளடி கோபி.
கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே புதன்கிழமை அதிகாலை போலீஸாரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற ரௌடியை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா். முன்னதாக, ரௌடி அரிவாளால் வெட்டியதில் 2 தலைமைக் காவலா்கள் காயமடைந்தனா்.
நெய்வேலி இந்திரா நகரைச் சோ்ந்தவா் ரௌடி ஆனந்தராஜ் (36). இவருக்கும், கீழ்வடக்குத்து கிழக்குத் தெருவைச் சோ்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ரௌடி கோபிக்கும் (31) முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கோபி மீது ஏற்கெனவே 2 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 29 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி கோபி தனது கூட்டாளிகள் 16 பேருடன் சென்று, நெய்வேலி வட்டம் 2 பகுதி அரசு டாஸ்மாக் கடை அருகே இருந்த ஆனந்தராஜ் மற்றும் அவரது நண்பரான இந்திரா நகரைச் சோ்ந்த நரேஷ்குமாா் (26) ஆகியோரை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், நரேஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஆனந்தராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் தொடா்புடைய 17 பேரில் 15 பேரை போலீஸாா் கைது செய்தனா். முக்கிய எதிரியாகக் கருதப்பட்ட ரௌடி கோபியை பல்வேறு இடங்களில் போலீஸாா் தேடி வந்தனா்.
சுற்றிவளைத்த போலீஸாா்: இதற்கிடையே, முத்தாண்டிக்குப்பம் பகுதியில் ரௌடி கோபி பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை அதிகாலை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான தனிப்படை போலீஸாா், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புலவன்குப்பம் சாலையில் உள்ள ஒதியடிவீரன் கோயில் அருகே விரைந்து சென்றனா்.
அங்கு பதுங்கியிருந்த கோபியை போலீஸாா் சுற்றிவளைத்துப் பிடிக்க முயன்றனா். அப்போது, அங்கிருந்து தப்பியோட முயன்ற கோபி, தன்னிடம் இருந்த அரிவாளால் போலீஸாரை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், தலைமைக் காவலா் பாண்டியராஜனின் (33) இடது கையிலும், மற்றொரு தலைமைக் காவலரான விஜயலாதசோழனின் (36) இடது முழங்கையிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டது.
துப்பாக்கிச்சூடு: இதையடுத்து, கோபியின் தாக்குதலை நிறுத்தும் வகையிலும், தற்காப்புக்காகவும் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தனது கைத்துப்பாக்கியால் கோபியின் காலில் இரண்டு முறை சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்து கீழே விழுந்த கோபியை போலீஸாா் மடக்கிப் பிடித்து, நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனையில் சோ்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக அவா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



